Tamilnadu

“அரசு மருத்துவமனையில் தற்போது ஒரு நோயாளி கூட காத்திருக்கும் நிலை இல்லை”: அமைச்சர் சேகர்பாபு பேட்டி !

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவு மற்றும் புதிதாக ஏற்படுத்த உள்ள ஆக்சிஜன் படுக்கைகள் தயார்படுத்தும் பணிகள் குறித்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உடல்நிலை தொடர்பான விவரங்களை உறவினர்கள் அறிந்துகொள்ளும் விதமாக டிஜிட்டல் பலகை அமைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில், 18 வயது நிறைவடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் படிப்படியாக மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும். மேலும், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஒரு ஆம்புலன்ஸ் கூட காத்திருக்கும் நிலைமை இருக்க கூடாது என முதலவர் உத்தரவிட்டிருந்தார். அதேபோன்று தற்போது நோயாளிகள் காத்திருக்கும் நிலை இல்லை; உடனடியாக மருத்துவ வசதி வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாற்று கருத்து உடையவர்களும் பாராட்டும் விதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். ஆட்சிக்கு வந்து 15 நாட்களிலேயே முதலமைச்சரின் செயல்பாடுகளை பார்த்து மாற்று கட்சியினர், மாற்று கருத்து உடையவர்களும் அவரை ஆதரிக்கிறார்கள்." என தெரிவித்தார்.

Also Read: வெளிநாட்டில் இருந்து அதிநவீன கருவிகள் இறக்குமதி.. ஆக்சிஜன் உற்பத்தியில் வேகம் காட்டும் தமிழக அரசு!