Tamilnadu

அடுத்த 3 நாட்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை விருகம்பாக்கம் மீனாட்சி பொறியியல் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் , சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் திறந்து வைத்தனர் .

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கொரோனா பாதிப்புற்ற நோயாளிகளின் சிகிச்சைக்காக ஏற்கனவே பல மருத்துவமனைகளில் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்தாலும் படுக்கைகள் நிரம்பி வழிகிறது. எனவே கொரோனா சிகிச்சை மையங்களை புதிதாக ஏற்படுத்தி வருகிறோம்.

ஈஞ்சம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கைகளில் 33 ஆக்சிஜன் வசதி உடையவை அடுத்த 2 நாளில் அனைத்து படுக்கையும் ஆக்சிஜன் படுக்கையாக மாற்றப்படும். ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் அங்கு பணி செய்ய உள்ளனர். வி்ருகம்பாக்கத்தில் தற்போது திறக்கப்பட்டுள்ள 100 படுக்களில் 40 க்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து படுக்கைகளும் ஆக்சிஜன் படுக்கையாக மாற்றப்படும். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மாநகராட்சி மருத்துவர்கள் இங்கு பணியில் ஈடுபடுவர்.

பெரிய மருத்துவமனைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவே கொரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. நந்தனம் வர்த்தக மையத்தில் 104 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் செயல்பாட்டு வந்துள்ளது. தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அடுத்த 3, 4 நாட்களில் தீர்வுக்கு வரும்.

சென்னையில் 250 புதிய அவசர ஊர்திகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. சென்னையில் 450 க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் கொரோனா தொடர்பான பணிகளில் செயல்பட்டு வருகிறது.

அடுத்த 2, 3 நாட்களில் 18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் தொடங்கி வைப்பார் . இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் . கொரோனாவிற்கு ஒரே தீர்வு தடுப்பூசிதான். 5 கோடி பேருக்கு அடுத்த 3 மாதத்தில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ஆக்சிசன் லாரிக்காக இரவு 1 மணி வரை காத்திருந்து பணியாற்றி அமைச்சர் மற்றும் எம்.பி.. மதுரை மக்கள் பாராட்டு!