Tamilnadu

“நாளை முதல் ‘இ-பதிவு’ செய்தால் மட்டும் போதும்; ‘இ-பாஸ்’ தேவையில்லை” : தமிழக அரசு விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தடுக்கும் விதமாக மாநில அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இதையடுத்து, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்களின் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மே 17ம் தேதி முதல் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலுமான போக்குவரத்துக்கு இ-பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவித்திருந்தது.

ஆனால், இ-பதிவை, இ-பாஸ் என்று தவறுதலாக்கச் செய்தி பரப்பப்பட்டது. இதனால் மக்கள் மிகுந்த குழப்பத்தில் இருந்த நிலையில், இ-பாஸ் மற்றும் இ-பதிவு குறித்து தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

அதில், “மாவட்டங்களுக்கு இடையில் அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்குப் பயணம் செய்ய இ-பதிவு மட்டும் செய்தால் போதும்” என கூறியுள்ளது.

மேலும், பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org இணையதளத்தில் இ-பதிவு செய்து, இ-பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

அதாவது இ-பாஸ் என்றால் இணையத்தில் விண்ணப்பித்து அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும். ஆனால், இ-பதிவு என்றால் இணையத்தில் பதிவு செய்து அதன் ஆவணத்தை வைத்திருந்தாலே போதும். அரசின் ஒப்புதல் பெற தேவையில்லை என்பதுதான் இந்த அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

Also Read: கொரோனா தடுப்பூசி: மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு ஏற்படுத்திய புதிய வழிமுறை - அறிவிப்பு வெளியீடு!