Tamilnadu

கோவை, திருச்சி, மதுரையிலும் விரைவில் கொரோனா 'வார் ரூம்’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை, 830 படுக்கை வசதிகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது ஆக்சிஜன் தேவை மிகவும் அவசியம் என்பதால், ஆக்சிஜன் பயன்படுத்துவதில் சிக்கனமாக இருக்கவேண்டும் என மருத்துவமனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தேவைக்கு ஏற்ப ஆக்சிஜன் சிக்கனமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் இருப்பதைப் போல் கோவை, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா வார் ரூம் விரைவில் அமைக்கப்படும்" என தெரிவித்தார்.

Also Read: “என்னைப் போல இன்னொரு குழந்தை தந்தையை இழக்கக்கூடாது” - நிவாரண நிதி அளித்த சிறுமி : கனிமொழி MP நெகிழ்ச்சி!