Tamilnadu

புகார் எழுந்ததைத் தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிய கட்டணம் நிர்ணயம்: தமிழக அரசு அதிரடி !

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தமிழக அரசுக்கு புகார் வந்தது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பாதிப்புக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சைக்கு அதிக கட்டணங்கள் வசூசலிக்கப்பட்டதையடுத்து அரசே சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் அந்த குழு தனது அறிவிப்பை வெளியிடும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

இதனையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான கட்டணத்தை மூன்று வகைகளாக பிரித்து தமிழக அரசு முதல் கட்டமாக அறிவித்துள்ளது. அதன்படி தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் முதல் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1500 ரூபாயும், 10 கி.மீ க்கு மேல் செல்வதற்கு கி.மீக்கு 25 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், உயிர்காக்கும் கருவிகள் கொண்ட வசதியுடன் கூடிய தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு, முதல் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2000 ரூபாயும், 10 கி.மீ க்கு மேல் செல்வதற்கு கி.மீக்கு 50 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு முதல் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4,000 ரூபாயும், 10 கி.மீ க்கு மேல் செல்வதற்கு கி.மீக்கு 100 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் இத்தகைய உத்தரவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: வெறும் 10 நாட்களில் ஆக்ஸிஜன் வசதியுடன் தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணி தீவிரம்.. குவியும் பாராட்டு!