Tamilnadu

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அரிசி கஞ்சி வழங்கும் பெண் காவல் ஆய்வாளர்.. குவியும் பாராட்டு!

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் ராஜீவ்காந்தி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அவர்கள் காலை உணவை உண்பதற்கும் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் அரிசி கஞ்சி தயாரித்து வழங்கி வருவது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனகாலத்தில் நோய் தொற்றால் உயிரிழந்த சடலங்களை தானே முன்வந்து அடக்கம் செய்ததாக கூறிய காவல் ஆய்வாளர் தற்பொழுது ஒவ்வொரு அரசு மருத்துவமனை வாயிலிலும் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அரிசி கஞ்சி வழங்கிவருகிறார்.

சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பை சேர்ந்த காவல் ஆய்வாளர் காஞ்சனா. இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். சமூக சிந்தனையும் சமூக அக்கறையும் கொண்ட இவர் ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசுடன் இணைந்து சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு கொரானா நோய் தோற்றால் உயிரிழந்த மருத்துவரின் சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் சர்ச்சைகள் எழுந்ததையடுத்து, உயிரிழந்த சடலங்களை தானே முன்வந்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து அடக்கம் செய்வதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் அலை கொரானா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு அவர்கள் உண்பதற்கு அரிசிக் கஞ்சி வழங்கி வருகிறார். பத்தாம் தேதி முதல் 24ம் தேதி வரை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காலை 9 மணிக்கு கஞ்சி வழங்குவதாக தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே அரசு ஸ்டான்லி மருத்துவமனை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் கஞ்சி வழங்கிவரும் ஆய்வாளர் காஞ்சனா அரசுடன் இணைந்து நாமும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் ஊரடங்கு முடியும் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் தினமும் அரிசி கஞ்சி வழங்கப்படும் என தெரிவித்தார். காவல் பெண் ஆய்வாளர் கொரானா நோய்த்தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்தே மக்களுக்கு பணியாற்றி வருவது பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

Also Read: “புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க முயற்சி?” : அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!