Tamilnadu

தமிழகத்தில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு: முன்னேற்பாட்டுக்காக நாளை மட்டும் ஞாயிறு ஊரடங்கு கிடையாது!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் ஏற்கனவே ஞாயிறன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. மேலும் காய்கறி கடைகளுக்கும், உணவு விடுதிகளுக்கும், தேநீர் கடைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் பேருந்துகளில் 50 சதவீதம் மட்டுமே பயணிகளுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலிலிருந்து வந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை குறைக்கும் விதமாக, மே 10 ஆம் தேதியிலிருந்து மே 24ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்குத் தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

மே 10ம் தேதியிலிருந்து முழு ஊரடங்கு நடைமுறைக்கு வர உள்ளதால், பொதுமக்கள் பதற்றமடையாமல் இருப்பதற்கும், தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வதற்கும் இன்றும் நாளையும் (மே 8, 9 தேதிகளில்) அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், "முழு ஊரடங்கு 10.05.2021 முதல் அமல்படுத்தப்படவிருப்பதை முன்னிட்டு, பொதுமக்களும், நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வதற்காக 08.05.2021 (சனிக்கிழமை) மற்றும் 09.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களிலும் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் வழக்கம் போல் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.

Also Read: மே 10 முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு: எவை எவை இயங்கும்? இயங்காது? முழு விவரம் காண்க!