Tamilnadu

“இவ்வளவு நாளாக ஆலோசித்துத்தான் எதையும் செய்தார்களா?”: விஜயபாஸ்கர் விளக்கத்திற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

இந்தியாவில் கொரோனா தொற்றுப்பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

அதேவேளையில் கொரோனா நோயாளிக்கு பெரிதும் தேவையாக இருந்து வரும் மருத்துவ ஆக்சிஜன் தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. இதனால் பெரும் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது.

அதேவேளையில் நிலைமை கைமீறிப்போன சூழலில் தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை அனுமதியில்லாமல் பிற மாநிலங்களுக்குஅனுப்பும் வேளையை தற்போது மோடி அரசு செய்து வருகிறது.

அந்த வகையில், சென்னை ஸ்ரீபெரும்புத்தூரில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில், 45,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாது, மத்திய அரசு இத்தகைய முடிவை, தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் இத்தகைய முடிவிற்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழகத்திலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா- தெலங்கானாவுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. இதுபற்றி எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் வேறு கொடுக்கிறார். இவ்வளவு நாட்களாக இவர்களை ஆலோசித்து தான் எதையும் செய்தார்களா என்ன?

‘மாநிலத்தில் அரசு என ஒன்று இருக்கிறது; அதனுடன் கலந்து பேசி முடிவுகளை எடுக்க வேண்டும்’ என்ற சிந்தனையே மத்திய அரசுக்கு இல்லாமல் போனதற்கு அடிமைகளின் கையாலாகாத்தனமே காரணம். ஊழல் வழக்குகளில் தப்பிப்பதற்காக ஆரம்பம் முதலே மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்ததன் விளைவே இது.

அண்டை மாநிலங்களுக்கு உதவ வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ள போது, இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு தூக்கி கொடுப்பது தமிழக மக்களுக்கு மத்திய அரசும் அவர்களது அடிமைகளும் செய்யும் துரோகம்-புறக்கணிப்பு.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தெரிந்து திருடினார்கள்; இப்போது தெரியாமல் திருடுகிறார்கள்” : மத்திய அரசு குறித்து புலம்பிய விஜயபாஸ்கர்!