Tamilnadu

தடுப்பூசிக்கு செயற்கை தட்டுப்பாடு; மக்கள் அலைக்கழிப்பு : மருத்துவர் - சுகாதாரத்துறை பரஸ்பர குற்றச்சாட்டு

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையால் தினமும் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டது.

தமிழகத்தில் ஏப்.14 முதல் ஏப்.16-ம் தேதி வரை தடுப்பூசி திருவிழாவை சுகாதாரத்துறை நடத்தி வருகிறது. இதையடுத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், வட்ட மருத்துவமனைகள், நகர்ப்புற, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன.

ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் சுகாதாரத்துறை, மருத்துவத் துறையினர் இடையே ஒத்துழைப்பு இல்லாததால் தடுப்பூசி இருந்தும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிக்குச் செயற்கையான தட்டுப்பாடு நிலவுகிறது. மானாமதுரை அரசு மருத்துவமனையில் சில தினங்களாக தடுப்பூசி இல்லை எனக் கூறி மக்களை முத்தனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைக்கின்றனர்.

Also Read: “தடுப்பூசி சேவையை எக்காரணம் கொண்டும் வர்த்தக நோக்கில் அணுகக்கூடாது” : தினகரன் தலையங்கம் வலியுறுத்தல்!

முத்தனேந்தல் சுகாதார நிலையத்துக்குச் சென்று வர போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் ரூ.200 செலவழித்து ஆட்டோக்களில் மக்கள் சென்று வருகின்றனர். இது குறித்து அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டால் சுகாதாரத் துறையினர் தடுப்பூசி மருந்துகளை போதிய அளவு அனுப்பவில்லை என்று கூறுகின்றனர்.

ஆனால் சுகாதாரத் துறையினரோ தேவையானவற்றை மருத்துவத்துறையினர் கேட்டுப் பெறவில்லை என்று கூறுகின்றனர். சுகாதாரத் துறை, மருத்துவத் துறையினர் இடையே போதிய ஒத்துழைப்பு இல்லாததால் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன்கூறியதாவது: தடுப்பூசி அனுப்புவதை பொருத்து செலுத்தி வருகிறோம். மானாமதுரை அரசு மருத்துவமனையில் ஏப்.15-ம் தேதி 10 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏப்.16-ம் தேதிக்கு 40 தடுப்பூசி மருந்து சுகாதாரத்துறையிடம் கேட்டுள்ளோம்,’ என்று கூறினார்.

Also Read: தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு; தடுப்பூசி திருவிழாவும் கைதட்டுவது போன்று வெற்று ஜம்பம்தானா !?