Tamilnadu
கிசான் திட்டத்தில் போலி பயணாளர்களை சேர்த்து ரூ.321 கோடி முறைகேடு : தமிழக வேளாண் துறையின் மோசடி அம்பலம்!
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின்படி, விவசாயிகள் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் செலுத்தப்படும். இது மூன்று தவணைகளாக அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
இத்திட்டத்தில் தமிழக வேளாண்துறை அதிகாரிகள், தங்கள் பகுதிகளில் உள்ள இ-சேவை மையத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு போலி பயனாளிகளை சேர்த்து முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதும், குறிப்பாக விவசாயிகள் இல்லாத பலரை போலியாக சேர்த்து அவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கி இருப்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது. கொரோனா காலத்தில் அரசு ஊழியர்கள் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தபோது, கம்ப்யூட்டர் பாஸ்வேர்டுகளை தனியார் புரோக்கர்கள் தவறாக பயன்படுத்தி, போலியாக பல பேரை சேர்த்துள்ளனர். இதனால் பல மாவட்டங்களில் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது.
இதில் குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அதிகம் பேரை சேர்த்து இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தனியார் கம்ப்யூட்டர் மைய உரிமையாளர்கள், புரோக்கர்கள், வேளாண் அதிகாரிகள் உள்ளிட்ட 80 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது தவிர, போலியாக சேர்ந்தவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்படி தமிழகத்தில் ரூ.162 கோடியே 54 லட்சம் மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
“தமிழகத்தில் மார்ச் 2018 முதல் மார்ச் 2019 வரை 27 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். ஏப்ரல் 2019 முதல் ஜூலை 2019 வரை 6 லட்சம் பேரும், 2019 ஆகஸ்ட் முதல் நவம்பர் 2019 வரை 1 லட்சம் பேரும் பதிவு செய்துள்ளனர். இதற்கு அடுத்த மாதங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதன்படி, 2019 டிசம்பர் முதல் 2020 மார்ச் வரை 3 லட்சம் பதிவு செய்தனர்.
ஏப்ரல் 2020 முதல் ஜூலை 2020 வரை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சமாக உயர்ந்தது. இந்த கடைசி 4 மாதத்தில்தான் போலியாக பலர் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு 6 லட்சத்து 97 ஆயிரத்து 36 பேர் போலியாக சேர்க்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.321 கோடியே 36 லட்சத்து 32 ஆயிரம் திரும்ப பெறவேண்டும் என்று கணக்கிடப்பட்டது. இதில் தற்போது வரை ரூ.162 கோடியே 54 லட்சம் திரும்ப பெறப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர்கள் கூறினர்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!