Tamilnadu
பட்டும் திருந்தாத காவல்துறை : கொரோனா பணிக்குச் சென்ற மருத்துவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று தாக்குதல்!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் கட்ட அலை தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதேநேரத்தில் கொரோனா கட்டுப்பாடு விதிக்கப்பட்டதில் இருந்து காவல்துறையினரின் அராஜகம் அதிகரித்து வருகிறது.
கொரோனா விதிமுறைகளை மீறும் மக்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையோ அபராதமோ விதிப்பதற்கு மாறாக, லத்தியால் அப்பாவி பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்கும் வன்முறைகள் ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக நேற்றைய தினம் கோவையில், உணவத்தில் இரவு 10 மணிக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது போலிஸார் ஒருவர் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், கொரோனா சிகிச்சைக்கு சென்ற மருத்துவர் ஒருவரை காவல்துறையினர் தாக்கிய சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் கூடல்நகர் கலைவாணன் நகரை சேர்ந்தவர் மருத்துவர் தமிழரசன். இவர் மதுரை அரசு மருத்துவமனையின் கொரோனா அவசர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி இரவு பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் மருத்துவர் தமிழரசன் சென்றுள்ளார். அப்போது பீபி.குளம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலிஸார், மருத்துவரின் வாகனத்தை மறித்து ஆவணங்களை பரிசோதித்துள்ளனர். அப்போது போலிஸாரிடம் தனக்கு பணிக்கு நேரமானது எனக் மருத்துவர் கூறியதால், ஆத்திரமடைந்த போலிஸார் அவரைத் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நேற்றைய மதுரை மாநகர் போலிஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் மருத்துவர் தமிழரசன் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், “பீபி.குளம் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள சந்திப்பில் எஸ்.ஐ மற்றும் மப்டியில் இருந்த போலிஸார் எனது வாகனத்தை நிறுத்தினார்கள்.
அவர்களிடம், எனது ஓட்டுனர் உரிமம், வாகனத்தின் ஆர்சி புத்தகம், வாகன காப்பீடு ஆகியவற்றை காண்பித்தேன். அதனை வாங்கி வைத்துக்கொண்டு, என்னை அங்கேயே நிற்கும்படி கூறினர். நான் அவர்களிடம், ‘‘நான் டாக்டர் என அடையாள அட்டையை காட்டி, கொரோனா அவசரப்பணிக்கு சென்று கொண்டிருக்கிறேன். ஆவணங்களை சரிபார்த்து அனுப்பவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டேன்.
ஆனால், அங்கிருந்த போலிஸார், என்னிடம், தகாத வார்த்தைகளைப் பேசி மிரட்டினர். மேலும் நான் முகக்கவசம் அணியவில்லை எனக்கூறி அபராதம் விதித்தனர். என்னை ரோட்டில் வைத்து ஆக்ரோஷமாக மாறி மாறி முகத்தில் அடித்தனர். பின்னர் என்னை வலுக்கட்டாயமாக தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு இழுத்துச்சென்றனர். அங்கு 1 மணி நேரத்திற்கும் மேலாக உட்கார விடாமலும், தண்ணீர் கூட கொடுக்காமலும் நிற்க வைத்தனர்.
விசாரணை என்ற பெயரில் ஒருவர் மாற்றி ஒருவராக வந்து மிரட்டினர். இதுகுறித்து இன்ஸ்பெக்டரிடம் கூறினேன். இதனையறிந்து, என்னை தாக்கிய எஸ்.ஐ மற்றும் போலிஸார் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினர். ‘‘மரியாதையாக பிரச்னை செய்யாமல் ஓடிவிடு. இல்லையென்றால், பொய் வழக்கு போட்டு, வாழ விடாமல் செய்து விடுவோம்” என மிரட்டினார்கள். போலிஸார் தாக்கியதில் காயமடைந்த நான், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். என்னை வெவ்வேறு நபர்கள் வந்து மிரட்டி செல்கின்றனர்.
கொரோனா அவசரப்பணிக்கு சென்று கொண்டிருந்த என்னை தடுத்து நிறுத்தி, அனைத்து ஆவணங்களையும் காண்பித்த பிறகும், என்னை மருத்துவர் என்றும் பாராமல் ரோட்டில் வைத்து தாக்கியும், புகார் கொடுத்தால், பொய் வழக்கு பதிவு செய்து வாழவிடாமல் செய்து விடுவோம் என்றும் மிரட்டிய தல்லாகுளம் எஸ்.ஐ மற்றும் மப்டியில் இருந்த போலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
“விஜய் இன்னும் அசெம்பிள் ஆகாத என்ஜின்” : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!
-
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களின் நலன் காப்பதில் முன்னனி மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு!
-
தமிழ் மொழியுணர்வுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள... ‘உயிர் நிகர் தமிழ்‘ நூல்! : முழு விவரம் உள்ளே!
-
ஊழல்வாதிகளை சுத்தம் செய்யும் 'வாஷிங் மெஷின்': பாஜக ஃபார்முலா மகாராஷ்டிர மாநிலத்தில் கிழிந்து தொங்குகிறது!