Tamilnadu

கட்டப்பஞ்சாயத்து செய்து காதலர்களை தற்கொலைக்கு தள்ளிய அ.தி.மு.க பிரமுகர்... ராமநாதபுரத்தில் கொடூர சம்பவம்!

ராமநாதபுரம் மாவட்டம், பனையங்காள் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் பூலாங்குளத்தைச் சேர்ந்த நம்புகலா என்ற பெண்ணை கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து நம்புகலாவின் குடும்பத்தினர் அப்பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவரான அ.தி.மு.க பிரமுகர் அற்புதராஜை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். அந்த கட்டப்பஞ்சாயத்தில் இருவரும் பிரியவில்லை என்றால், பிரவீன் குடும்பத்தை கொன்றுவிட்டு, நம்புகலாவையும் கொன்றுவிடுவதாக மிரட்டி இருவரையும் பிரித்துள்ளார் அ.தி.மு.க பிரமுகர் அற்புதராஜ்.

அதோடு மட்டுமல்லாது, பிரவீனின் குடும்பத்தினருக்கு, அ.தி.மு.க பிரமுகர் அற்புதராஜ் ரூ.3 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த நம்புகலா கடந்த பிப்ரவரி 11ம் தேதி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் காதலி மரணத்தால் மனமுடைந்து சுற்றித்திரிந்த பிரவீன் எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பின்னர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வீட்டிற்கு அழைத்துவந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பிரவீன் மண்ணென்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு பற்றவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தார். காதலர்களை பிரித்து தற்கொலைக்கு தூண்டிய அ.தி.மு.க பிரமுகர் மீது உரிய நடவடிக்கை என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: பட்டும் திருந்தாத காவல்துறை : கொரோனா பணிக்குச் சென்ற மருத்துவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று தாக்குதல்!