Tamilnadu

"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு!

தமிழகத்தில் குறைந்துவந்த கொரோனா வைரஸ் தொற்று ஒரு மாதமாக மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. நேற்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழக அரசு கொரோனா தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் தமிழகம் முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை என ஐ.சி.எம்.ஆர் நடத்திய கள ஆய்வின் முடிவை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் 64 தெருக்களில் முகக்கவம் அணிவது குறித்தான ஆய்வை ஐ.சி.எம் ஆர் நடத்தியுள்ளது. இதில் சென்னையில் கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் முகக்கவசம் அணியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

மேலும், பெரும்பாலானவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதில்லை என்றும், காய்கறி கடைகளில் மக்கள் அருகருகே நின்று பொருட்களை வாங்குவதாகவும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், குடிசைப் பகுதிகளில் 79 சதவீதம் பேரும் குடிசை அல்லாத பகுதிகளில் 71 சதவீதம் பேரும் முறையாக முகக்கவசம் அணிவதில்லை. சென்னையில் உள்ள 9 வணிக நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 51 சதவீதம் பேர் முறையாக முகக்கவசம் அணிவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்கள் மத்தியில் மாநகராட்சியும், தமிழக அரசும் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தாததால்தான் மக்கள் சரியாக முகக்கவசம் அணியாமல் வெளியே வருகிறார்கள்.

முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிப்பது மட்டும் இதற்கு தீர்வாகாது. எனவே முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை தமிழக சுகாதாரத்துறை ஏற்படுத்த வேண்டும் என மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: “சாமானியருக்கு அடி உதை.. அமைச்சருக்கு?”- முகக்கவசம் அணியாமல் விமானநிலையத்தில் பூஜை செய்த பா.ஜ.க அமைச்சர்!