Tamilnadu

“திருமணம் செய்து வைக்காததால் தந்தையைக் கொன்ற மகன்” - செங்கல்பட்டு அருகே கொடூர சம்பவம்!

செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு சந்திரசேகர் திருமணம் செய்துவைத்துவிட்டார். இதையடுத்து இரண்டாவது மகனான சீனிவாசனுக்கு திருமண ஏற்பாடு செய்யாமல், கடைசி மகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்துவந்துள்ளார்.

இதனால் சீனிவாசன் மன வருத்தத்தில் இருந்துள்ளார். மேலும் தந்தையிடம் அடிக்கடி சொத்தை பிரித்துத் தருமாறு வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார். சொத்தை பிரித்துத் தர முடியாது என சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் அரிவாளால், சந்திரசேகரை சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிறகு வீட்டில் இருந்த உறவினர்கள் சந்திரசேகரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினர் சீனிவாசன் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை தேடிவருகின்றனர்.

Also Read: “குடிக்க மட்டும் பணம் எங்க இருந்து வருது?” : சண்டை போட்ட மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்!