Tamilnadu

“குடிக்க மட்டும் பணம் எங்க இருந்து வருது?” : சண்டை போட்ட மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்!

சேலம் மாவட்டம், ஆணைக்கவுண்டர் காட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். மனைவி ஈஸ்வரி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், விஜயகுமார் தையல் வேலையிலிருந்து கிடைக்கும் பணம் அனைத்தையும் மது குடிப்பதற்கு செலவழித்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல், மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதைப் பார்த்து ஆவேசமடைந்த ஈஸ்வரி,குடும்பச் செலவுக்கு கேட்டால் பணம் இல்லனு சொல்லுற, ஆனா குடிப்பதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வருது? எனக் கேட்டு கணவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர், கணவனிடம் சண்டைபோட்டுவிட்டு, ஈஸ்வரி தூங்கச் சென்றுவிட்டார். எல்லோர் முன்னிலையிலும் தன்னை அவமானப்படுத்திவிட்டால் என ஆத்திரத்தில் இருந்த விஜயகுமார், , தூங்கிக்கொண்டிருந்த ஈஸ்வரியின் கழுத்தைக் கயிற்றால் நெரித்துள்ளார். இதில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, விஜயகுமார், காவல் நிலையத்திற்குச் சென்று, குடிபோதையில் தன் மனைவியின் கழுத்தைக் நெரித்துக் கொன்றதாகக் கூறி சரணடைந்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார், அவரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது வீட்டில் ஈஸ்வரி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

பின்னர், ஈஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து நங்கவள்ளி காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சோலார் நிறுவன அதிகாரியை வெட்டிக் கொன்ற ‘மாஸ்க்’ கும்பல்... தென்காசி அருகே பயங்கரம்!