Tamilnadu

ஆட்டை நாய் கடித்ததால் ஏற்பட்ட தகராறு... சிவகங்கை அருகே தந்தை, மகன் வெட்டிப் படுகொலை!

சிவகங்கை மாவட்டம், அழுபிள்ளைதாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கும், இவரது சகோதரிக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கருப்பையா வளர்த்து வந்த ஆட்டை, அவரது சகோதரி வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்துக் குதறியுள்ளது. இதனால் ஆவேசமடைந்த கருப்பையாவும், அவரது மகன் சாமிநாதனும், கருப்பையாவின் சகோதரி வீட்டுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர் தனது மகன்களிடம் கூறியதை அடுத்து, சகோதரியின் மகன்கள் தாமோதரன், திரிசங்கு, சுந்தர்ராஜ், சிங்கராஜ் ஆகியோர் கருப்பையாவின் வீட்டிற்குச் சென்றனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால், காட்டுப்பகுதியில், ஆடு மேய்த்துக்கொண்டிருந்த கருப்பையா மற்றும் அவரது மகன் சாமிநாதனைத் தேடிச் சென்று தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த கருப்பையாவும், சாமிநாதனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இருவரின் உடலையும் மீட்டு பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

Also Read: விசாரணை என்ற பெயரில் அடித்து கொடுமை செய்த போலிஸ்.. மனஉளைச்சலில் பெண் தற்கொலை - அ.தி.மு.க ஆட்சியில் அவலம்!