Tamilnadu

“பிரதமரையும் தெரியாது, உங்களையும் தெரியாது” : பிரச்சாரத்தின்போது சிறுவனிடம் அசிங்கப்பட்ட ஹெச்.ராஜா!

தமிழகத்தில், சட்டப்பேரவைக்கான தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதனால் வேட்பாளர்கள் அனைவரும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காரைக்குடி தொகுதியில் பா.ஜ.க சார்பில் ஹெச்.ராஜா போட்டியிடுகிறார். எப்படியாவது நோட்டாவை விட அதிக வாக்குகளை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக தொகுதி முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், பனம்பட்டி கிராமத்தில் ஹெச்.ராஜா பிரச்சாரம் மேற்கொண்டபோது, சிறுவர்களிடமாவது நல்ல பெயர் வாங்குவோம் என்ற ஆசையில் அவர்களுடன் பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது ஒரு சிறுவனிடம், நீ என்ன படிக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவனும், ஏழாம் வகுப்பு படிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளான்.

பின்னர், அந்த சிறுவனிடம், பிரதமர் பெயர் என்ன? என்று கேட்டுள்ளார். இதற்கு அந்த சிறுவன் கொஞ்சம் கூட பயப்படாமல், அவர் யார் என்று எனக்குத் தெரியாது எனக் கூறினான். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஹெச்.ராஜா, துண்டுப் பிரசுரத்திலிருந்த மோடியின் படத்தை காட்டி, இவர்தான் பிரதமர் மோடி எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து,துண்டுப்பிரசுரத்தில் தனது புகைப்படத்தைக் காட்டி இது யார் என்று கேட்டுள்ளார். இதற்கும் அந்தச் சிறுவன் தெரியாது என கூறியுள்ளான். “அடே நான்தானடா அது” என தனது முகக்கவசத்தை கழற்றிக் காண்பித்துள்ளார் ஹெச்.ராஜா. “ஓ, நீங்க தானா அது..?” என சிறுவன் கூற, “அட ஆளவிடுடா சாமி” என அங்கிருந்து ஓட்டமெடுத்த ஹெச்.ராஜா, தொகுதி மக்களிடையே தனக்கு மரியாதை இவ்வளவுதானா என நொந்துபோயிருக்கிறாராம்.

Also Read: எவ்வளவு பட்டாலும் திருந்தாமல் சமஸ்கிருதத்தை திணிக்க துடிக்கும் பா.ஜ.க... கடும் எதிர்ப்பால் பின்வாங்கல்!