Tamilnadu
"பயப்படாம தடுப்பூசி போட்டுக்கோங்க” : தேர்தல் பரப்புரைக்கு இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ள இதேநேரத்தில், கொரோனா தொற்றின் பாதிப்பும் அதிகரித்துள்ளது. முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்யும் இடங்களில் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் கூடுகின்றனர். இதனால், கொரோனா தொற்று அதிக அளவில் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சித் தலைவர்கள், கொரோனா விழிப்புணர்வு குறித்து வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், தி.மு.கவின் கதாநாயகனான தேர்தல் அறிக்கையின் முக்கியத்துவத்தையும், அ.தி.மு.க அரசின் 10 ஆண்டுகால ஆட்சியின் கொடூரங்களையும் பற்றி மக்கள் மத்தியில் பேசிவரும் அதேவேளையில், கொரோனா குறித்தான விழிப்புணர்வையும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் எந்தத் தொகுதிக்கு சென்றாலும், அங்கு வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிவிட்டு, "பொதுமக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும், பிரச்சாரத்திற்கு வரும்போதும், கூட்டமாக இருக்கும் இடங்களிலும் முகக்கவசம் அணியாமல் இருக்கக்கூடாது.
அதேபோல், கொரோனா தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள வேண்டும். ஊசி போட்டுக் கொள்ளும் சிலருக்கு காய்ச்சல், உடல்வலி போன்றவை ஏற்படும். அதைக் கண்டு அஞ்ச வேண்டாம். ஓரிரு நாட்களில் சரியாகி விடும். நான் கூட தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளேன். நீங்களும் போடவேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்" எனக் கூறி தனது தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
தி.மு.க தலைவர் மு.கஸ்டாலின் பிரச்சாரத்தின் போது, தனது கட்சியின் கொள்கைகள், திட்டங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து பேசாமல், கட்சித் தொண்டர்கள், பொதுமக்களின் உடல்நலத்தில் அக்கறைகொண்டு கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசிவருவதை சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!