Tamilnadu

பாலியல் அத்துமீறலைக் கண்டித்து போராடிய பல்கலை. மாணவர்கள் கைது: கடைசி நேரத்திலும் திருந்தாத எடப்பாடி அரசு!

சென்னை பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவர்கள் கடந்த ஜனவரி மாதம் மெரினா விடுதி உணவுக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 8 பேர் மீது பல்கலைக்கழக நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு, அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என முடிவு வெளியிட்டது. இதை எதிர்த்து இரண்டு நாட்கள் உள்ளிருப்பு போராட்டத்தை மாணவர்கள் நடத்தினர்.

இதனையடுத்து மீண்டும் விடைத்தாள் திருத்தியபோது 8 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக கூறியுள்ளனர். அந்த தேர்ச்சி செய்தியை எழுத்துபூர்வமாக தரும்படி தொல்லியல் துறை தலைவர் சௌந்தரராஜனிடம் கேட்டபோது மாணவர்களை தாக்கியும் மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் வகையிலும் நடந்துகொண்டதாகக் கூறப்பட்டுகிறது.

இதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்களும் பதிவாளரும் உடந்தையாக இருந்ததாகவும், உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் சௌந்தரராஜன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுவாயில் பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை திருவல்லிக்கேணி துணை ஆணையர் சரவணன் இன்ஸ்பெக்டர் சீதாராமன் தலைமையில் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து சென்னை பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்கு எதிரில் உள்ள காவல்துறை குடோனில் அடைத்து வைத்துள்ளனர். இதில் 12க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் காவல்துறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போராட்டத்திற்கு வந்த சங்க நிர்வாகிகளை போலிஸார் வழிமறித்து கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெண்களுக்கு அ.தி.மு.க ஆட்சியில் அதிக பாதுகாப்பு வழங்குவதாக வாய் கூசாமல் பொய் பேசி வருகிறார்.

தலைநகரில் உள்ள முக்கிய பல்கலைக்கழத்தில் துறைத்தலைவர் மூலம் மாணவிக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்களை தட்டிக்கேட்கக் கூட முடியாத நிலையில் தான் இந்த அ.தி.மு.க ஆட்சி உள்ளது. மேலும் துறைத்தலைவரை பாதுகாக்க அ.தி.மு.க அரசு தீவிரம் காட்டி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட துறைத் தலைவர்” : சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!