Tamilnadu
உயரதிகாரிகள் டார்ச்சர்.. தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர் : காவல்துறை ஆணையரிடம் பெண்ணின் தந்தை புகார் !
சென்னை அடுத்த பீர்க்கன்காரணை காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகாமி. இவர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில், தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தேர்தல் பணிக்காக, சிவகாமி சேலையூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து கடந்த மார்ச் 2ம் தேதி சிவகாமி சேலையூர் காவல் நிலையத்தில், பணியில் சேர்ந்துள்ளார்.
இதையடுத்து, பீர்க்கன்காரணை காவல்நிலைய ஆய்வாளர் பொன்ராஜ், காவல் நிலையத்தில் மீதியுள்ள பணிகளை முடித்துத் செல்லுப்படி சிவகாமியிடம் கேட்டுள்ளார். இதற்கு சிவகாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பின்னர், சேலையூர் உதவி ஆணையர் சகாதேவனும், பீர்க்கன்காரணை காவல்நிலையத்தில் உள்ள பாக்கி பணிகளை முடித்துவிட்டு வரும்படி அறிவுறுத்தியுள்ளார். இதனால் மார்ச் 3ம் தேதி மீண்டும் பீர்க்கன்காரணை காவல்நிலையத்திற்குச் சென்று அங்கு சிவகாமி பணியாற்றியுள்ளார்.
அப்போது, சிவகாமி பீர்க்கன்காரணை காவல்நிலையத்தில் பணியாற்றியதை பார்த்த உளவுப் பிரிவு போலிஸார் ஒருவர், சிவகாமி சேலையூருக்கு செல்லவே இல்லை என தெற்கு இணை ஆணையர் லட்சுமிக்குத் தவறான தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதனைக்கேட்ட தெற்கு இணை ஆணையர் லட்சுமி, உடனடியாக வாக்கி டாக்கியில் சிவகாமியிடம் பேசி அடுத்த ஒரு மணி நேரத்தில் சேலையூர் காவல் நிலையத்திற்கு வந்து சேர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனால், பதறியடித்துக் கொண்டு சிவகாமி சேலையூர் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். இந்த சம்பவங்களுக்கு இடையே, இது குறித்து மார்ச் 6ம் தேதி, சிவகாமியிடமும், சேலையூர் காவல் ஆய்வாளர் சீனிவாசனிடமும் லட்சுமி விசாரணை நடத்தினார்.
அப்போது, சிவகாமியை லட்சுமி ஒருமையில் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சிவகாமி, கழிவறைக்குப் பயன்படுத்தப்படும் அமிலத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அங்கிருந்த சக போலிஸார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிவகாமி சிகிச்சை பெற்று வருகிறார்.
பின்னர், தனது மகளை மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் பேசி தற்கொலைக்குத் தூண்டிய தெற்கு இணை ஆணையர் லட்சுமியின் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகாமியின் தந்தை நவநீதகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார். தலைநகர் சென்னையிலேயே உயர் அதிகாரி ஒருவர் பெண் காவலரிடம் மோசமான முறையில் நடந்துக்கொண்டு, அவரை தற்கொலைக்கு தூண்டிய சம்பவம் சக காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... மவுனம் காக்கும் தவெக அரசு; விளாசிய உதயநிதி ஸ்டாலின்!
-
“திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயமா?; தவெக அரசு வேடிக்கைப் பார்க்கலாமா?”: ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
சிங்கப்பெண் அதிரடிப்படையில் தேர்வான பெண் காவலருக்கு டார்ச்சர்? - இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார்!
-
”கூடிய ’GenZ DMK’ கொள்கைக் கூட்டம்.. தைரியமாக களமாடுங்கள் திமுக உங்களுடன் என தெம்பூட்டிய கழக சட்டத்துறை”
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!