Tamilnadu

“தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 28% இருந்து 79.6% ஆக அதிகரிப்பு”: எடப்பாடி அரசின் அவலம்!

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவியதால் கடந்தாண்டு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை என அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றிருந்த மாணவர்கள் கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய வறுமையால், வேலைகளுக்குச் செல்லும் அவல நிலைக்கு ஆளாகினர். இதனையடுத்து தற்போது மீண்டும் கல்வி நிலையங்கள் திறந்தபோதும், கல்விக்கு கற்கச் செல்வதில் திரும்புவதில் பலருக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக, குழந்தை உழைப்பு எதிர்ப்புப் பிரச்சாரம் என்ற தன்னார்வ அமைப்பு ஆய்வு ஒன்று நடத்தியது. அதில், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 79.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த ஆய்வில், “தமிழகத்தில், கொரோனா ஊரடங்கிற்கு முன்பு 28 சதவீதமாக இருந்த குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை, ஊரடங்கிற்குப் பிறகு 79.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய 17 மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை கொரோனா ஊரடங்கால் வேகமாக அதிகரித்துள்ளது.

மேலும், 94 சதவீதம் பேர் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் செல்வதாக தெரிவித்துள்ளனர். இதில் 84 சதவீத குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். 14 சதவீத குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் செல்லப்போவதில்லை எனவும் கூறியுள்ளனர்.

அ.தி.மு.க அரசின் தவறான பொருளாதார கொள்கையால், பள்ளி மாணவர்கள் குழந்தை தொழிலாளராக மாறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை குழந்தைகள் நல ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுள்ளது.

Also Read: சரக்கு ஆட்டோவில் முதல்வரின் பிரச்சாரத்திற்கு சென்றவர்களின் வாகனம் விபத்து : 40 பேர் படுகாயம் !