Tamilnadu

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் விடுமுறை... தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில், பள்ளிகளைத் திறந்ததால், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டையில் உள்ள ஒரே பள்ளியில் 56 மாணவிகள், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது பெற்றோர்கள் மாணவர்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. சில வாரங்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அ.தி.மு.க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி முதல் 9, 10, 11ம் வகுப்பு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி முதல் 9, 10, 11ம் வகுப்பு பள்ளிகளுக்கு மறுஉத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

9, 10, 11ம் வகுப்புகளுக்கு ஆன்லைன்/டிஜிட்டல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். மற்ற வாரியங்களில் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளபடி நடைபெறும்.

கொரோனா அதிகரிப்பு மற்றும் தொற்றால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தவும், விடுதிகள் இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி 12ம் வகுப்பை தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Also Read: பள்ளிகளில் வேகமெடுக்கும் கொரோனா : எடப்பாடி அரசின் அவசர கதியால் பாதிப்புக்குள்ளாகும் பள்ளி மாணவர்கள் !