Tamilnadu

சம்பள பணத்தை பங்கிடுவதில் தகராறு... இசைக் கலைஞரை அடித்துக் கொலை செய்த கும்பல் : நீலகிரி அருகே கொடூரம்!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி குஞ்சப்பனை அருகே உள்ளது மந்தரை கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் மணி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர். மணி இக்கிராமத்தில் செயல்படும் இசைக்குழுவுடன் சேர்ந்து ஊர் ஊராகச் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், அரவேணு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மணி கலந்து கொண்டுள்ளார். பிறகு நிகழ்ச்சி முடிந்து தனது குழுவினருடன் ஊர் திரும்பியுள்ளார். அப்போது, இசை நிகழ்ச்சிக்காக கொடுக்கப்பட்ட பணத்தைப் பிரிக்கும்போது குழுவினருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர், மணி ஒரு வழியாகப் பணத்தைப் பிரித்துக் கொண்டு, மந்தரை நோக்கி வந்துள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை பலமாகத் தாக்கியுள்ளார். இதில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவரை அடித்து கொலை செய்தவர்கள், சடலத்தை அவர் அணிந்திருந்த வேட்டியிலேயே கட்டி மரத்தில் தொங்க விட்டுச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, இசை நிகழ்ச்சிக்குச் சென்ற மணி நீண்ட நேரமாகியும் விட்டு வராததால் அவரது குடும்பத்தார் அவரைத் தேடியுள்ளனர். அப்போது மரத்தில் மணியின் உடல் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிறகு இது குறித்து காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மணியின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மணியுடன் இசை நிகழ்ச்சிக்கு சென்றவர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது ஒருவர் மட்டும் தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை பிடிக்கும் முயற்சியில் போலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read: பள்ளிகளில் வேகமெடுக்கும் கொரோனா : எடப்பாடி அரசின் அவசர கதியால் பாதிப்புக்குள்ளாகும் பள்ளி மாணவர்கள் !