Tamilnadu

“அ.தி.மு.க பிரமுகர் உதவியுடன் நில அபகரிப்பு - மன உளைச்சலில் ஆடிட்டர் மரணம்” : சென்னையில் தொடரும் அராஜகம்!

சென்னையில் பெசண்ட் நகர் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன். இவர் ஆடிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஸ்ரீவத்ஸன் என்ற மகன் உள்ளார். ஆடிட்டர் சீனிவாசன் கடந்த 2019-ம் ஆண்டு சோழிங்கநல்லூர் கிராமம், கலைஞர் கருணாநிதி சாலை அருகே உள்ள 27 சென்ட் காலி இடத்தை ஒரு கோடியே இரண்டு லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

இந்நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு தான் வாங்கிய நிலத்தை பார்ப்பதற்காக சீனிவாசன் சென்றுள்ளார். அப்போது அங்கு கட்டுமான பணிகள் நடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது கிரானைட் நிறுவன உரிமையாளர் ஆனந்தகுமரன் என்பவர் கார்த்திக் என்பவரிடம் வாடகை ஒப்பந்தம் செய்திருக்கும் தகவல் தெரியவந்தது.

அதன் பின்னர் சீனிவாசன் வருவாய்துறையினரிடம் தகுந்த ஆதாரங்களைச் சமர்பித்து புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஆலந்தூர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆனந்தகுமாரன், கார்த்திக், அவரது தந்தை திருநாவுக்கரசு மீது நில அபகரிப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புகார் அளிக்கப்பட்டும் காவல்துறையினர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் காலம்தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் குழப்பமடைந்த சீனிவாசனின் மகன் ஸ்ரீவத்ஸன் அருகில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்தில், ஆனந்தகுமாரன், கார்த்திக், அவரது தந்தை திருநாவுக்கரசு ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளார்.

விசாரணை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்த என்ன காரணம் என்று ஆராய்ந்தபோது இவர்களின் பின்னணியில் அ.தி.மு.க பிரமுகர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. கார்த்திக், திருநாவுக்கரசு, ஆனந்தகுமரன் ஆகியோருக்கு ஆதரவாக கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவரும் முன்னாள் தலைமைச் செயலாளர் ஒருவரும் காவல்துறை உயரதிகாரியிடம் பேசியிருக்கின்றனர்.

அவர் வலியுறுத்தலின்படியே காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என அறிந்து, தனது நிலம் அபகரிக்கப்பட்ட மன உளைச்சலில் இருந்த சீனிவாசன் அடுத்து ஓரிரு நாட்களிலேயே உயிரிழந்துள்ளார். அ.தி.மு.க பிரமுகர் உதவியுடன் நில அபகரிப்பு செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

- நிதர்சன் உதயா

Also Read: Zomato டெலிவரி பாய் மீது அபாண்ட குற்றச்சாட்டு... பெங்களூரு பெண் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!