Tamilnadu

“அரசியல் வரலாற்றில் காணாத அதிசயம்” - கூட்டணியில் ஒதுக்கிய சீட்டை திருப்பிக்கொடுத்த சரத்குமார்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் தலைமையில் பிரதான கூட்டணிகள் இத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இந்தக் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கும், இந்திய ஜனநாயக கட்சிக்கும் தலா 40 இடங்கள் ஒதுக்கப்பட்டன. சமத்துவ மக்கள் கட்சி தென்காசி, ஆலங்குளம், நெல்லை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார் சரத்குமார்.

சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் கிடைப்பதே பெரும்பாடு என சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், தங்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட 40 தொகுதிகளில் 3 தொகுதிகளை திருப்பி அளித்துவிட்டதாகவும், 37 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ச.ம.க வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வெற்றி வாகை சூட உழைக்க வேண்டியிருப்பதால் தானும் ராதிகாவும் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார் சரத்குமார்.

கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் சிலவற்றை திருப்பியளித்து, அரசியலில் புதிய நடைமுறையையே ஏற்படுத்தியுள்ள சரத்குமாரை பார்த்து அவரது கட்சித் தொண்டர்கள் அதிசயித்துள்ளனர்.

Also Read: “கால்ல விழுந்து சி.எம் ஆனவருக்கு சரியான பக்குவம் இல்லீங்க” : யாரைச் சொல்கிறார் பிரேமலதா?