Tamilnadu

தொடரும் வரதட்சணை கொடுமை : திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் - புதுச்சேரி அருகே நடந்த கொடூரம்!

புதுச்சேரி, புதுசாரம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் கேஸ் வினியோகஸ்தராக பணியாற்றி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் தனசிங்கு பாளையத்தைச் சேர்ந்தவர் சிவபாக்கியம். இவர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து, சிவபாக்கியம் தனது கணவர் ஏழுமலையுடன் புதுச்சேரியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஏழுமலை, மனைவியிடம் அடிக்கடி நகைகள் கேட்டும், வீட்டு சொத்து பத்திரம் கேட்டும் துன்புறுத்தி வந்துள்ளார்.

இதுகுறித்து, சிவபாக்கியம் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவர்கள், மகளுக்குத் தாலி பிரித்துப் போடும்போது நகை மற்றும் சொத்து பத்திரம் தருவதாகக் கூறியுள்ளனர். ஆனால் ஏழுமலை தினந்தோறும் மது அருந்துவிட்டு வந்து தனது மனைவி சிவபாக்கியத்தை துன்புறுத்தியுள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரவு சிவபாக்கியம் இறந்துவிட்டதாக அவரது வீட்டிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், புதுச்சேரிக்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

பின்னர், திருமணம் ஆன நாள் முதல் வரதட்சணை கேட்டு தனது மகளை துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் என் மகளை கொலை செய்து உள்ளனர். எனவே எழுமலை, அவரின் குடும்பத்தார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரி சிவபாக்கியத்தின் பெற்றோர், தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதேவேளையில், திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் தாசில்தார் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Also Read: “இந்தியாவில் சொகுசுப் பேருந்துகளை விற்க மோடி அரசு லஞ்சம் வாங்கியது” : Scania நிறுவனம் புகார்!