Tamilnadu

சொத்து தகராறில் சொந்த அண்ணனையே அடித்துக் கொன்ற தம்பி : கள்ளக்குறிச்சி அருகே கொடூரம்!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கொங்கராபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது தம்பி பழனிவேல். இவர்களுக்குச் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தை பாகப்பிரிவினை செய்வதில் அண்ணன், தம்பி இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், சண்முகம் நேற்று இரவு தனது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தம்பி பழனிவேல் தனக்குச் சேர வேண்டிய பாகத்தைப் பிரித்துக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பழனிவேல், வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த சண்முககத்தின் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளார். இதனைப் பார்த்த அவரது மனைவி தனலட்சுமி தடுக்க முயன்றுள்ளார். அப்போது, அவரையும் பழனிவேல் தாக்கியுள்ளார்.

மேலும் பழனிவேலுடன் வந்த அவரது மனைவி செல்வி, மகன் மூவேந்திரன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து, சண்முகத்தையும் அவரது மனைவி தனலட்சுமியையும் இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கி உள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த தனலட்சுமி சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பழனிவேல் மற்றும் மூவேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள செல்வியை தேடி வருகின்றனர்.

Also Read: “இறந்தவர்களுக்கு மீண்டும் வாக்கு” : தோல்வி பயத்தால் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்த அமைச்சர் சரோஜா!