Tamilnadu

கஞ்சா கடத்தல்.. நில ஆக்கிரமிப்பை தட்டிக் கேட்ட இளைஞர் வெட்டி கொலை : போலிஸாரையே மிரள வைத்த கொலைத் திட்டம்!

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் தாய் மூகாம்பிகை நகர் பகுதியில் வசித்து வந்தவர் ராஜ்குமார். இவர் தே.மு.தி.க அனகாபுத்தூர் நகர இளைஞரணி துணை தலைவராக இருந்தார். இவர் அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே தையல் கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 01ம் தேதியன்று சுமார் 10:30-மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது ஒருவர் வழி கேட்பது போல் ராஜ்குமாரின் வாகனத்தை நிறுத்தினர். ராஜ்குமார் வாகனத்தை நிறுத்தியதும் திடீரென பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் ராஜ்குமாரை சரமாரியாக வெட்ட தொடங்கினார், உடனே வழி கேட்ட நபர் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜ்குமாரை சரமாரியாக வெட்டினார்.

ராஜ்குமாரின் அலறல் சத்தம் கேட்டவுடன் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதைப் பார்த்த மர்பநபர்கள் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஆட்டோவில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த சங்கர் நகர் போலிஸார் ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து சங்கர் நகர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வந்தனர். சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே இலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போது இரண்டு நபர்கள் ராஜ்குமாரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து விசாரணை செய்ததில் அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த காட்டான் (எ) சதீஷ் (35) மற்றும் ரஞ்சித் (25) என தெரியவந்தது.

இவர்கள் இருவரையும் தேடி வந்த நிலையில் அனகாபுத்தூர் ஆற்றுப் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே சங்கர் நகர் போலிஸார் இருவரையும் கைது செய்து அவர்கள் கொலைக்காக பயன்படுத்திய இரண்டு கத்திகளை அனகாபுத்தூர் ஆற்றில் இருந்து எடுத்தனர். அதன் பிறகு இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலிஸார் கொலைக்கான காரணம் குறித்து கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

பின்னர் தீவிர விசாரணையில் அவர்களது நண்பர்கள் அனகாபுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதை தொடர்ந்து போலிஸாரிடம் துப்புக் கொடுத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை காட்டிக் கொடுத்ததால் தான் ராஜ்குமாரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

அதன் பிறகு இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி கடந்த 2ஆம் தேதி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்த நிலையில் போலிஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அனகாபுத்தூர் பகுதியில் உள்ள புரட்சி பாரத கட்சி மாநிலத் துணைச் செயலாளர் அன்பரசன் (58) என்பவர் தான் இந்த கொலைக்கான முக்கிய குற்றவாளி என தெரியவந்தது.

உடனே போலிஸார் அன்பரசன் பிடிக்க அவரது வீட்டுக்கு விரைந்தனர், வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் வீட்டில் இல்லை அன்பரசன் தலைமறைவாகி விட்டார் என தெரியவந்தது. அதன் பிறகு புனித தோமையார் மலை துணை ஆணையர் பிரபாகரன் அவர்களின் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு அன்பரசனை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். மூன்று நாட்களாக தேடி வந்த நிலையில் அன்பரசனை பிடிக்க முடியவில்லை.

தீவிர தேடுதல் வேட்டையில் போலிஸார் ஈடுபட்டு வருவதை அறிந்த அன்பரசன் நேற்றைய தினம் சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு தானாக சென்று சரணடைந்தார். அதன் பிறகு அவரிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 2015ம் ஆண்டு அனகாபுத்தூர் ஆற்றோரம் உள்ள வீடுகளை நகராட்சி அதிகாரிகள் இடித்தனர், பின்னர் அங்கு இருந்தவர் அனைவருக்கும் மாற்று இடம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு ஆற்றோரம் வீடுகள் இடிக்கப்பட்டிருந்த இடத்தில் 2 .1/2 கிரவுண்ட் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் கடை ஒன்று அன்பரசன் வைத்துள்ளார். இதைப் பார்த்த ராஜ் குமார் அரசாங்கம் இடித்த இடத்தில் எப்படி நீங்கள் ஆக்கிரமிப்பு செய்து கடை வைக்க முடியும் அதை உடனடியாக காலி செய்யுங்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு அளவிற்கு சென்றதால் ஆத்திரமடைந்த அன்பரசன் அவர் ஆக்கிரமிப்பு செய்த இடத்திற்கு இடையூறாக ராஜ்குமார் இருப்பதால் அவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று சுமார் ஒரு வருட காலமாக காத்திருந்தார். சதீஷ் மற்றும் ரஞ்சித் இருவரின் நண்பர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை போலிஸாருக்கு ராஜ்குமார் காட்டிக் கொடுத்ததால் இவர்கள் இருவருக்கும் பகை இருப்பது அன்பரசனுக்கு தெரியவந்தது.

அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அன்பரசன் அவர்களை வைத்தே ராஜ்குமாரை கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி அவர்களை நேரில் வரவழைத்து நமது எதிரியான ராஜ்குமாரை கொலை செய்தால் 3 .1/2 லட்சம் ரூபாய் தருவதாகவும் அடையாறு ஓரம் உள்ள காலி இடத்தில் கடை வைத்து தருவதாகவும் அன்பரசன் கூறியுள்ளார் என விசாரணையில் தெரியவந்தது. பின்னர் போலிஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “வாகனம் மோதி காவலர் உயிரிழப்பு; விபத்தா? கொலையா?”: காவல்துறை அலட்சியம் காட்டுவதாக உறவினர்கள் சாலை மறியல்!