Tamilnadu
"மதசார்பற்ற கட்சிகள் தி.மு.க. தலைமையில் ஒன்று சேர வேண்டும்"- சீத்தாராம் யெச்சூரி அறைகூவல்!
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கூட்டணி அமைப்பதிலும், தேர்தல் பரப்புரையிலும் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தமிழகம் வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, "பணக்காரர்களின் வளர்ச்சிக்காகவே மோடி அரசு திட்டங்களை வகுத்து வருகிறது" என பா.ஜ.க அரசைக் கடுமையாகச் சாடினார்.
கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசுகையில்,"பா.ஜ.க-வின் கொள்கைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே சிதைத்து வருகிறது. பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை பெரும்பாலும் நாள்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. வரியின் மூலம் திரட்டப்படும் லட்சக்கணக்கான கோடி பணம் மோடியின் பாஜக பிரச்சாரத்திற்கு செலவிடப்படுகிறது.
நாடு தற்போது மிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வை நோக்கிச்செல்கிறது. தற்போது கடந்த வருடம் கொரோனா காரணமாக இந்தியாவில் 15 கோடி பேர் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையிலும் நம்நாட்டில் கோடீஸ்வரர்கள் மிகப்பெரிய வளர்ச்சியடைந்துள்ளனர். உலகில் உள்ள பெரும் பணக்காரர்களை விட இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் வளர்ச்சி இந்த கொரோனா காலத்திலும் அபரிமிதமாக அதிகரித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில நண்பர்களின் வளர்ச்சிக்காகவே மோடி அரசு திட்டமிடுகிறது. அவர்கள் யாரென்று உங்களுக்கே தெரியும்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏஸ்.ஏ. பாட்டே பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையில் சமீபகாலமாக தெரிவித்து வரும் கருத்துகள் துரதிஷ்டவசமானது. அதன் காரணமாகவே இன்று நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு குழுக்கள், அக்கறையுள்ள குடிமக்கள் அடங்கிய குழு வெளிப்படையான பகிரங்கக் கடிதம் ஒன்றை தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ளது.
தலைமை நீதிபதி ஏஸ்.ஏ. பாட்டே தேசத்தின் பெண்களிடம் மன்னிப்புக்கேட்கவும் வேண்டும். ஒரு கணம் தாமதமின்றி இந்திய தலைமைநீதிபதி என்ற பதவியில் இருந்து நீங்கள் விலகிடுவதே நேர்மையான செயலாக இருக்கும்.
அவசர நிலையில்கூட மாநில உரிமையை மீட்கப் போராடிய பாரம்பரியம் தமிழகத்துக்கு உள்ளது, அதனால் வரும் சட்டமன்றத் தேர்தல் தமிழக மக்களின் மாநில உரிமையை மீட்டெடுக்க முக்கியமானதொரு வாய்ப்பாக அமையும். மக்கள் அதை சரியாக கையாள வேண்டும். மதசார்பற்ற கட்சிகள் தி.மு.க. தலைமையில் ஒன்று சேர்ந்து மதவாத சக்திகளை எதிர்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!
-
வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”