Tamilnadu

'விவசாயக் கடன் தள்ளுபடி சான்றிதழில் எடப்பாடி படம்': வெற்று விளம்பரங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

தமிழகத்தில், தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து அ.தி.மு.க அரசு அவசர அவசரமாக விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், மாவட்டங்களில், உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகளுக்கான கூட்டுறவு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதில், கீழத்திருப்பூந்துருத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்குவதற்காக விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, விவசாயிகள் கடன் தள்ளுபடிச் சான்றிதழை வாங்குவதற்காக அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, விவசாயிகளுக்குப் பயிர் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மறைந்த ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் படங்கள் இருந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தற்போது, தேர்தல் நடத்தி விதிமுறைகள் அமலில் உள்ளதால், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் படங்கள் சான்றிதழில் இடம் பெற்றதற்கு விவசாயிகளும், விவசாய சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வேறுவழியின்றி ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் படங்களைச் சான்றிதழ்களில் நீக்கிய பிறகு விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Also Read: கிராம உதவியாளர் பணிக்கு ரூ.6.50 லட்சம் லஞ்சம் பெற்ற அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்: அதிர்ச்சி கிளப்பும் ஆடியோ!