Tamilnadu

தினமலர் முன்னாள் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மறைவு - தி.மு.க தலைவர் நேரில் சென்று அஞ்சலி!

தினமலர் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இன்று காலை காலமானார். இரா.கிருஷ்ணமூர்த்தி நாணயவியல் ஆய்வுகளைச் செய்துவந்த அறிஞர். கணினி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியவர் என்ற பெருமையையும் கொண்டவர்.

ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவையடுத்து, அவரது உடலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “தினமலர் முன்னாள் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவுச்செய்தியைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன்.

இதழியல் துறையில் தனக்கான பாதையில் முத்திரை பதித்த தினமலர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவு, தமிழ்ப் பத்திரிகையுலகுக்குப் பேரிழப்பாகும். அச்சு ஊடகத்தில் கணினிப் பயன்பாட்டை 1980-களின் இறுதியிலேயே கொண்டு வந்த முன்னோடி நாளிதழ்களில் முரசொலிக்கும் தினமலருக்கும் முக்கிய பங்கு உண்டு.

பத்திரிகையாளராக மட்டுமின்றி, நாணயவியல் ஆராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆய்வுகளும், ஆதாரங்களும் இந்திய அரசின் செம்மொழித் தகுதி தமிழுக்குக் கிடைத்திட முத்தமிழறிஞர் கலைஞர் எடுத்த முயற்சிகளுக்குத் துணை நின்றன. முத்தமிழறிஞர் கலைஞருக்கு நெருங்கிய நண்பராக விளங்கியவர். இத்தகைய சிறப்புமிகு பணிகளுக்காகக் குடியரசுத் தலைவரால் தொல்காப்பியர் விருது வழங்கப் பெற்ற பெருமைக்குரியவர் கிருஷ்ணமூர்த்தி.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பத்திரிகைத் துறையினருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.