Tamilnadu
தமிழக போக்குவரத்து துறையின் பெயரை ‘லஞ்சம் பெறும் துறை’ என மாற்றுக” - கொந்தளிக்கும் லாரி உரிமையாளர்கள்!
தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் இலகுரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வகை வாகனத்திற்கும் 30 சதவிகிதம் வாடகை உயர்த்தப்படும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் பொதுக்குழு மற்றும் ஒருங்கிணைந்த மோட்டார் உரிமையாளர்கள் தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை மாதவரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான லாரி உரிமையாளர்கள் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை லோக்கல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் முருகன் கூறுகையில், மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் விலையை குறைத்து விற்பனையை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டுவர வேண்டும்.
15 ஆண்டுகள் பழைய வாகன அழிப்பு நடவடிக்கையை வாகனங்களுக்கு 20 ஆண்டாக நீடித்து மாற்றம் செய்து வாழ்வாதாரத்தை இழந்து வாடும் குடும்பங்களில் ஒருவருக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாயை மத்திய மாநில அரசு வழங்க வேண்டும்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் மாத மாமூல், தினசரி மாமூல், உரிமங்கள் புதுப்பித்தல் மாமூல் என இந்தியாவில் நம்பர் ஒன் லஞ்சம் பெறும் துறையாக போக்குவரத்து துறை செயல்பட்டு வருவதாகவும் தமிழக போக்குவரத்துறையின் பெயரை தமிழக போக்குவரத்து லஞ்சம் பெறும் துறை ஆக மாற்றம் செய்து அரசிதழில் வெளியிட வேண்டும்.
வேகக் கட்டுப்பாடு கருவி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஜி.பி.எஸ் கருவி தொடர்பான பிறப்பித்துள்ள உத்தரவுகளை போக்குவரத்து துறை திரும்ப பெற்று மீண்டும் மறு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அதிகாரிகள் எங்களுக்கு உத்தரவு வரவில்லை என ஊருக்கு ஒரு விலை நிர்ணயம் செய்து உரிமையாளர்களிடம் மிரட்டி பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்.
சுங்கச்சாவடி முறைகேடுகளில் ஈடுபடாமல், காலாவதியான சுங்கச்சாவடிகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக மத்திய மாநில அரசுகள் தலையிட்டு அகற்ற வேண்டும். மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள ஃபாஸ்டேக் நடைமுறையில் மென்பொருள் தொழில்நுட்ப கோளாறுகளால் வாகன ஓட்டிகளிடம் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது.
மோட்டார் தொழிலில் ஈடுபட்டு வரும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பயனடைவதற்கு மோட்டார் தொழிலுக்கு தனி நல வாரியம் அமைக்கவேண்டும். தமிழக அரசு தொடர்ந்து ஊழல் செய்து வருவதைத் தவிர எங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும். போக்குவரத்து துறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!