Tamilnadu

மனைவியை அம்மியால் அடித்து கழுத்தை அறுத்து கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை : அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு!

மனைவியை அம்மிக் கல்லால் அடித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த பேராசிரியருக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அண்ணா நகரில் உள்ள அடுக்ககம் ஒன்றில் கண்ணன் - மோகனாம்பாள் தம்பதி, அவர்களின் 13 வயது மகளுடன் வசித்து வந்தனர். வசதியான குடும்பத்தை சேர்ந்த மோகனாம்பாள் சற்று வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவரும், பேராசிரியருமான கணவன் கண்ணனை கேலி கிண்டல் செய்ததுடன், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

குடும்பத்தில் தினமும் பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி வாக்குவாதம் முற்றி, இருவருக்கும் கைகலப்பாகியுள்ளது.

கணவன், மனைவி இருவரும் மாறிமாறி அடித்துக்கொள்ள மனைவியை கணவன் அம்மிக் கல்லால் அடித்துள்ளார். அதில் மயங்கி கீழே விழுந்த மனைவி மீது ஏறி அமர்ந்து இரக்கமில்லாமல் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் கண்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், அதுதொடர்பான வழக்கு சென்னை 4வது அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.ஆர்.வி.ரவி முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் வி.முரளிகிருஷ்ணன் ஆஜராகி மனைவியை ஈவு இரக்கமின்றி கொலை செய்த கண்ணனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதாகவும், உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென வாதிட்டார்.

பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, தனது மனைவியை கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி கண்ணனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Also Read: கல் குவாரி உரிமம் வழங்கியதில் ஆளுங்கட்சியினர்- அதிகாரிகள் முறைகேடு : சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு!