Tamilnadu

தந்தை பெரியார் சிலைக்கு காவித்துண்டு - குல்லா அணிவித்து அவமதிப்பு : வேடிக்கை பார்க்கும் அ.தி.மு.க அரசு?

தமிழகத்தில் மத கலவரத்தை ஏற்படுத்த சங்-பரிவார் மற்றும் இந்துத்வா கும்பல் முயற்சித்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் இந்துத்வா தலைத்தூக்க முடியாததற்கு மிக முக்கிய காரணமாக தந்தை பெரியார் விளங்குகிறார்.

இதனால், தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைகள் தகர்க்கப்படுவதும், தாக்கப்படுவதும், சிதைக்கப்படுவதும், இழிவு செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது. நாடே போற்றும் தலைவரின் சிலையைச் சேதப்படுத்தி அதில் ஆனந்தம் அடையும் அற்ப நடவடிக்கையும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்கதையாகியுள்ளது.

சமீபத்தில்கூட கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது காவி சாயத்தைப் சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்தன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்து அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மர்மநபர் காவி சால்வை அணிவிக்கப்பட்டு, தொப்பி அணிவித்து சென்றள்ளனர். நடு இரவில் மர்ம நபர்கள், யாருக்கும் தெரியாமல் கலவரத்தை உருவாக்க திட்டமிட்டு இந்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யக்கோரி ஒரத்தநாடு திராவிடர் கழகத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளையும், சம்பவ இடத்தையும் காவல்துறை உயரதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

அங்குள்ள பதட்டமான சூழ்நிலையை தவிர்க்கும் பொருட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: OBC மாணவர்களுக்கு இடஒதுக்கீடு மறுப்பு?: தி.மு.க தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் மோடி அரசுக்கு ஐகோர்ட் கொட்டு!