Tamilnadu

“கொடநாடு கொலை வழக்கில் போலிஸ் FIR-ல் பல்வேறு குளறுபடிகள்” : நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு !

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இது குறித்தான வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கில், அரசு தரப்பு விசாரணை முடிந்து, எதிரி தரப்பு சாட்சிகளின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற விசாரணையில், சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 3 பேர் மட்டுமே ஆஜராயினர். இதனைத் தொடர்ந்து, கொடநாடு பங்களாவில் பணியாற்றிய லட்சுமி உள்ளிட்ட 2 பேரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

அப்போது, பணி பெண் லட்சுமியின் மகனை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தத்து எடுத்திருந்ததாக போலிஸார் குறிப்பிட்டிருந்தனர். இது குறித்து இன்றைய விசாரணையில், சயான் தரப்பு வழக்கறிஞர்கள் இது குறித்து லட்சுமியிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் தனது மகனை ஜெயலலிதா தத்து எடுக்கவில்லை என கூறியுள்ளார்.

இதேபோல், கடந்த விசாரணையின் போது கிராம நிர்வாக அலுவலரின் வாக்குமூலமும், போலிஸார் பதிவு செய்துள்ள தகவல்களும் முற்றிலுமாக மாறுபட்டுள்ளது. இப்படி போலிஸார் தாக்கல் செய்துள்ள தகவல்களுக்கும், சாட்சி விசாரணைகளில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதாக சயான் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர்.

பின்னர், இதனை கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணை அடுத்த 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இது குறித்து செய்தியார்களிடம் பேசிய, வழக்கறிஞர்கள், கொடநாடு வழக்கில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் போலிஸார் குறிப்பிட்டுள்ள தகவல்களுக்கும், சாட்சி விசாரணையின் போது வெளியாகும் தகவல்களுக்கும் அதிக முரண்பாடுகள் இருப்பதாகத் தெரிவித்தனர்.

குறிப்பாக, சம்பவம் நடந்த கொடநாடு பங்களாவிற்கு அப்போதைய ஆட்சி தலைவர் சங்கர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோர் நள்ளிரவிலேயே சென்றதாக கிராம நிர்வாக அலுவலர் விசாரணையின் போது தெரிவித்தார்.

ஆனால், போலிசார் பதிவு செய்துள்ள அறிக்கையில் அடுத்த நாள் காலை 9 மணிக்கு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி போலிஸாரின் தகவல்களுக்கும், சாட்சிகளின் விசாரணைக்கும் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் இருக்கின்றன. எனவே, நீலகிரி மாவட்ட முன்னாள் மாவட்ட ஆட்சி தலைவர் சங்கர் மற்றும் முன்னாள் எஸ்.பி. முரளி ரம்பா ஆகியோர் உள்பட முக்கியமான வி.ஐ.பி-களிடமும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என தெரிவித்தனர்.

Also Read: நிவாரணம் வழங்க விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட வேளாண் அதிகாரி : வைரல் ஆடியோ - அ.தி.மு.க ஆட்சியில் கொடுமை!