Tamilnadu
அரியலூரில் 3,520 குக்கர்கள் பறிமுதல் : வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்டதா?
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதிகளை நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம், சமத்துவபுரம் பகுதியில், பறக்கும் படை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது அந்த வழியாக கும்மிடிப்பூண்டியில் இருந்து தஞ்சாவூருக்கு சென்ற 2 லாரிகளை, நிறுத்தி உரிய ஆவணங்கள் உள்ளதா என சோதனை செய்தனர். அப்போது ஒரு லாரியில் இருந்த ஓட்டுநர், வாகனத்தில் வெறும் காலி பெட்டி தான் இருக்கிறது என கூறி, உடனே அங்கிருந்து லாரியை ஓட்டிச் சென்றுவிட்டார்.
இதையடுத்து, மற்றொரு லாரியை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, லாரி முழுவதும் அட்டைப்பெட்டிகள் இருந்தன. இவற்றை அதிகாரிகள் திறந்து பார்த்தபோது, 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட குக்கர்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், அட்டைப்பெட்டியில் எதுவும் இல்லை என்று, ஏமாற்றிச் சென்ற லாரியை பிடிக்க, அருகே இருந்த சுங்கச்சாவடி போலிசாருக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில், அந்த லாரியையும் பிடித்து சோதனை செய்தனர். அதிலும் குக்கர்கள் இருந்ததை அடுத்து, லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்த பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு லாரிகளையும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இந்த லாரிகளில் ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரத்து 520 குக்கர்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அ.மு.மு.க-வின் சின்னம் குக்கர் என்பதால், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்பதால் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும், குக்கர்கள் இருந்த அட்டைப் பெட்டிகளில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி.தினகரன் புகைப்படங்கள் இருந்தன. மேலும் அ.ம.மு.க வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன் படமும் இருந்ததால் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!