Tamilnadu

ஊரடங்கால் வேலையிழப்பு; பட்டினி கிடந்து குழந்தைகளை காத்த தாய்: நிற்கதியான பெண்ணுக்கு உதவிய தஞ்சை இளைஞர்கள்

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்க ஊரடங்கால் கோடிக்கணக்கில் புழங்கும் தொழில் துறைகள் முடங்கியது என்றாலும் அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என கோடிக்கணக்கானோரின் வருமானம் பறிபோனது அவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் குறித்த அச்சமும் அதிகரித்து வந்துள்ளது.

அவ்வகையில், தஞ்சாவூர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் உஷா. இவருக்கு பாலா, அன்பு என்ற இரு ஆண் குழந்தைகளும் தரணி என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு கணவனால் கைவிடப்பட்ட உஷா குழந்தைகளை காப்பாற்றுவதற்காக வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

திடீரேன கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உஷாவுக்கு இருந்த ஒரு வேலையும் பறிபோயுள்ளது. இதனால் உண்ண உணவில்லாமல் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார் உஷாவும் அவர்களது குழந்தைகளும். ஊரடங்கு சமயத்தில் கிடைத்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தான் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து வந்திருக்கிறார் உஷா.

இதனால் மனதளவில் சோர்ந்தும், உடலளவில் மிகவும் மெலிந்து காணப்பட்டுள்ளார் உஷா. இவர்களது நிலையை கண்டு வருந்திய பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களான பிரபு, ஃபக்ருதீ, விக்னேஷ், அஜீஸ் ஆகியோர் உஷா மற்றும் குழந்தைகளை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துக் கொடுத்திருக்கிறார்கள்.

மேலும் உஷாவின் நிலை குறித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியானதை அடுத்து பல தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் பட்டுக்கோட்டை தாசில்தார் தரணிகா, உதவி ஆட்சியர் பாலச்சந்தர் ஆகியோரும் உஷாவை மருத்துவமனையில் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் அளித்ததோடு குழந்தைகளை அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

அதேச்சமயத்தில் உஷாவுக்கு குடும்ப அட்டை வழங்கவும், கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கான உதவி தொகையை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

Also Read: கடலூர் அருகே விபத்தில் பள்ளி மாணவர்கள் பலி... பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்தபிறகு ஏற்பட்ட சோகம்!