Tamilnadu

வீடு கட்டித் தருவதாக ஏமாற்றிய எடப்பாடி அரசு: குடியிருந்த வீடுகளை இழந்து தெருவிற்கு வந்த இருளர் இன மக்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் பல்வேறு கிராமங்களில் அங்குள்ள ஏரி அல்லது குளக்கரையில் குடிசைபோட்டு இருளர் மற்றும் பழங்குடியின மக்கள் வசித்துவருகின்றனர். அவர்களுக்கென்று நிரந்தர வீடுகளோ, வீட்டுமனைகளோ இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

அப்படி உத்திரமேரூரை அடுத்த பாப்பான்குளம் பகுதியிலுள்ள குளத்தின் கரையில் வசித்துவந்த 20 ம் மேற்பட்ட இருளர் இன குடும்பங்களுக்கும், நீர்ப்பிடிப்பு பகுதியில் வசித்துவந்த சிலருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்களால் ஆணைப்பள்ளம் என்னுமிடத்தில் வீட்டுமனை பட்டா கொடுக்கப்பட்டது.

தற்சமயம் அந்த இடத்தில் கடந்த ஒரு வருடமாக குடிசை வீடுகள் கட்டி சுமார் 25 க்கும் மேற்பட்ட இருளர் மற்றும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். உத்திரமேரூரை அடுத்த ஆணைப்பள்ளம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகிறார்கள்.

கடந்த ஒருமாதத்திற்கு முன்பு அந்த மக்களுக்கு அரசு பழங்குடி இனத்தவர்களுக்கான பசுமை வீடு திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டித்தர உள்ளதாகவும் எனவே அவர்கள் வசித்து வந்த குடிசைகளை உடனடியாக அகற்றி இடத்தை சுத்தம் செய்து தர வேண்டும் எனவும் வட்டார வளர்ச்சி துறை சார்பாக கூறப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக அம்மக்கள் தாங்கள் வசித்து வந்த குடிசைகளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக காலி செய்துள்ளனர். பசுமை வீடு கட்டுவதற்காக அப்போது அங்கு பூமி பூஜையும் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அரசால் பசுமை வீடு கட்டித்தரப்படும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். ஆனால் அதன்பிறகு துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் அப்பகுதிக்கு வரவில்லை.

இதனால் தாங்கள் குடியிருந்த குடிசைகளை இடித்துவிட்டு பனியிலும், வெயிலிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை வைத்துக்கொண்டு சிரமப்பட்டு வந்துள்ளனர். திடீரென இரண்டு நாள் பெய்த பலத்த மழையால் அவர்களின் உணவு பொருட்கள் , உடை, உடைமைகள் மற்றும் அரசு ஆவணங்கள் முற்றிலும் நனைந்து சேதமடைந்துள்ளன.

அடுப்பிலிருந்து விறகுகள் வரை அனைத்தும் நனைந்துபோனதால் படுப்பதற்கு இடமின்றி, சாப்பிடுவதற்கும் வழியின்றி குழந்தைகளோடு தவித்து வருகின்றனர். மக்களுக்கு தற்காலிகமாக தங்குவதற்கு இடமும் உணவுக்கு தேவையான அத்யாவசிய பொருட்களும் வழங்கிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

மேலும் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தங்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், விரைந்து வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: “பைக்கில் வந்தவரை வழிமறித்து செயின் பறிப்பு” : சினிமா பாணியில் வழிப்பறி கும்பலை மடக்கிப்பிடித்த போலிஸ்!