Tamilnadu

இந்தியில் ஃபெயிலாகும் வட மாநிலத்தவர்கள் தமிழில் பாஸாவது எப்படி? - அதிமுக அரசை துருவியெடுத்த மதுரை ஐகோர்ட்

பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பணி வழங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பிற மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசுப்பணிகளில் நியமிக்கப்படுவது ஏன் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

ஊட்டி ஆயுதத் தொழிற்சாலையில், கெமிக்கல் பிராசஸிங் பிரிவில் 140 பணியிடங்களை நிரப்ப 2015-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அந்தப் பணிக்கான எழுத்துத் தேர்வில் ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணன் 40 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால், அவரை விடக் குறைவான மதிப்பெண் பெற்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆறு பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

அந்த ஆறு பேரின் பணி நியமனத்தை ரத்து செய்யக்கோரியும், தனக்குப் பணி வழங்கக் கோரியும் சரவணன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்குப் பணி வழங்க உத்தரவிட்டார். ஆனால், நீதிபதியின் ஆணையை ரத்து செய்யக்கோரி ஆயுதத் தொழிற்சாலை சார்பில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போதுதான் நீதிபதிகள், இப்படியொரு கேள்வியைத் தமிழக அரசை நோக்கி எழுப்பியிருக்கின்றனர். வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களின் தாய் மொழியான இந்தியில் தேர்ச்சி பெற இயலாத நிலையில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, பணி நியமனம் பெறுவது எப்படி..? பணித் தேர்வுகள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும்." என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுப்பையா "ஆயுதத் தொழிற்சாலை பணியில் 140 பணியிடங்களில் 50 சதவிகிதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள்" என்று கூற, அப்போது உடனடியாகக் குறுக்கிட்ட நீதிபதி என்.கிருபாகரன், ``தமிழ்நாட்டுக்கு என்ன பிச்சை போடுகிறீர்களா?’ ’என்று மிகக் காட்டமாகக் கேட்டிருக்கிறார்.

நீதிபதிகள் இந்த விஷயத்தில் இவ்வளவு தீவிரமாகக் கருத்து தெரிவிக்கக் காரணம் என்ன? வட மாநில இளைஞர்கள், அரசுத் தேர்வுகளில் இந்தியில் ஃபெயிலாவதும், தமிழில் அதிக மதிப்பெண்கள் எடுத்து பாஸாவதும் இயல்பாகவே இந்தத் தேர்வு முறைகளிலுள்ள முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகின்றன.

இங்கு இருக்கும் அரசுத்துறைகளில் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களை உள் நுழைத்து விடுகின்றனர். இந்த முறைகேடுகள் அரசியல் காரணங்களுக்காகவும் நடைபெறுகின்றன. தவிர, பிற மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இதுபோன்ற முறைகேடுகளுக்குத் துணைபோகின்றனர் என முரசொலி நாளேடு குறிப்பிட்டிருக்கிறது.

Also Read: “NLC-ல் வட மாநில இளைஞர்களை நியமித்து மண்ணின் மைந்தர்களை புறக்கணிப்பது சதி” - மோடி அரசுக்கு வைகோ கண்டனம்!