Tamilnadu

போதையில் வந்த தந்தையை தட்டிக்கேட்ட மகன் சுட்டுக்கொலை.. ஓய்வுப்பெற்ற ராணுவ வீரர் கைது - வேலூரில் அதிர்ச்சி

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் சுப்பிரமணி(50). தற்போது இவர் இரவு காவலாளி பணி செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் சுப்பிரமணி நேற்று இரவு குடித்துவிட்டு வந்து தனது மகளை திட்டியுள்ளார். இதனை இளையமகன் வினோத்(25) தட்டிக்கேட்ட போது தந்தை-மகன் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மதுபோதையில் இருந்த சுப்பிரமணி வீட்டில் இருந்த இரட்டை குழல் துப்பாக்கியை கொண்டு வினோத்தை சுட்டுள்ளார்.

இதில் குண்டடிபட்ட வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சுப்பிரமணி அங்கிருந்து தலைமைறைவாகியுள்ளார். பின்னர் தகவலறிந்து வந்த வேலூர் தாலுக்கா காவல் துறையினர் வினோத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் சுப்பிரமணியை தேடி வந்தனர். இப்படி இருக்கையில் சுப்பிரமணி அடுக்கம்பாறை பகுதியில் சுற்றித்திரியும் போது ரோந்து பணி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வேலூர் கிராமிய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுவுக்கு அடிமையான தந்தை தனது மகனையே சுட்டுகொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: முன்விரோதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் பகீர் சம்பவம்!