Tamilnadu

மோடி அரசின் வேளாண் சட்டத்தின் எதிரொலி : பஞ்சாப் தேர்தலில் மண்ணைக் கவ்விய பா.ஜ.க - காங்கிரஸ் அமோக வெற்றி!

மோடி அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் 80 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் போராடும் விவசாயிகளில் 60% விவசாயிகள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

மோடி அரசு பல கட்டப் பேச்சுவாத்தை நடத்தியும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்கவில்லை. இத்தகைய சூழலில் பஞ்சாப் மாநிலத்தில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.கவிற்கு தக்கப்பாடம் புகட்டுவோம் என பஞ்சாப் மக்கள் எச்சரித்திருந்தனர். இதனிடையே கடந்த பிப்ரவரி 14ம் தேதி, 8 மாநகராட்சிகள் மற்றும் 109 நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.

அதன் வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக 8 மாநகராட்சிகளில் 7லில் காங்கிரஸ் வென்றிருக்கிறது. அதேபோல் மொத்தமுள்ள 109 நகராட்சிகளில் 63 இடங்களில் காங்கிரஸ் வென்றிருக்கிறது.

குறிப்பாக, பதின்டா தொகுதியை காங்கிரஸ் 53 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றியுள்ளது. இந்த தொகுதியில் இருந்துதான் சிரமோனி அகாலிதளம் கட்சியின் ஹர்சிம்ரத் பாதல் எனும் பெண் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டிருந்து, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தார்.

இதில், பஞ்சாப் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ஜ.க ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றாமல் படுதோல்வி அடைந்தது. மேலும் நகராட்சிகள் 1 இடத்தை மட்டும் பா.ஜ.க பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “அது வெற்றி நடை போடும் தமிழகம் அல்ல; வெற்று நடைபோடும் தமிழகம்” : மு.க.ஸ்டாலின் சாடல் !