Tamilnadu

“பொது வெளியில் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்” : ரசிகர்களுக்கு நடிகர் அஜித் குமார் அறிவுரை!

நடிகர் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' கடந்த ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை ஹெச். வினோத் இயக்கினார். போனி கபூர் தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் வெற்றையைத் தொடர்ந்து, இந்தக் கூட்டணி ‘வலிமை’ படத்தில் இணைந்ததை அடுத்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு அக்டோபரில் 'வலிமை' படத்தின் படபிடிப்பு தொடங்கியது. இதுதான் இந்த படத்தின் முதல் அப்டேட். அதன் பிறகு கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக இப்படம் குறித்தான எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. இதனால் வருத்தமடைந்த ரசிகர்கள் 'வலிமை' UPDATES குறித்து ட்விட்டரில் கேட்க ஆரம்பித்தனர்.

சமீபத்தில் விஜய் நடித்த மாஸ்ட்டர் படத்தின் டீசர் வெளியானபோது, அஜித் நடித்த படம் குறித்து UPDATES வராததால், 'கடந்த 8 மாதங்களாக போனி கபூர் காணவில்லை, 'வலிமை' படத்தின் UPDATES காணவில்லை' என போஸ்ட்ர் அடித்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்கள் அஜித் ரசிகர்கள்.

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தர் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோதும், ரசிகர்கள் 'வலிமை' படத்தின் UPDATES கேட்டனர். அதேப்போல், சென்னையில் நடைபெற்று டெஸ்ட் போட்டியில் கூட வலிமை updates என்ற பதாகையை ரசிகர்கள் காட்டினர். இப்படி எங்கும் பார்த்தாலும் அஜித் ரசிகர்கள் 'வலிமை' படத்தின் தகவல்களைக் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக நடிகர் அஜித் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் "வலிமை" சம்பந்தப்பட்ட UPDATES கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது.

முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை.

நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும். இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read: மீண்டும் வீட்டுக்காவலில் ஒமர் அப்துல்லா.. “இதுதான் புதிய ஜனநாயகமா?” : கொந்தளிக்கும் ஒமர் அப்துல்லா!