Tamilnadu

“இப்படிக்கு வேலை இல்லா இளைஞர்” : வேலைக் கிடைக்காத விரக்தியில் எடப்பாடி அரசை சாடி பேனர் வைத்த இளைஞர்கள்!

மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மாநிலங்களில் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக நடவடிக்கையை மோடி அரசும், ஆளும் அ.தி.மு.க அரசும் எடுத்ததன் விளைவாக படித்த இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு தேடி காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.

குறிப்பாக, படித்த பட்டதாரி இளைஞர்கள் பலர் வேலைக் கிடைக்காத விரத்தியிலும், குடும்பத்தின் பொருளாதார சூழலையும் கணக்கில் கொண்டு கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். சென்னை போன்ற பெரும் நகரங்களில் உணவு டெலிவரி முதல் பல்வேறு சிறுசிறு வேலையில் ஈடுபட்டு வருவது படித்த பட்டதாரி இளைஞர்களே.

இத்தகைய சூழலில் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மூப்பை பதிந்த இளைஞர் ஒருவர் அரசைக் கண்டிக்கும் வகையில், நூதன முறையில் பிளக்ஸ் பேனர் ஒன்றை வைத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Unemployment 

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் கே.ஆனந்தராஜ். இவர் ஆசிரியர் பயிற்சி படித்து முடித்துவிட்டு வேலைக்காக புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம் புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே பிளக்ஸ் பேனர் ஒன்றை வைத்தார். அந்த பேனரில், “புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெற்றிகரமாக 24 ஆண்டு பதிவு மூப்பை பதிவு செய்த எங்கள் இனிய நண்பர் K.ஆனந்தராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

பின்குறிப்பு; நலம் விசாரித்தும்கூட ஒரு கடிதமும் வந்ததில்லை. இப்படிக்கு வேலை இல்லா இளைஞர்” என பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். இது வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வருவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தனியார் பத்திரிக்கைக்கு ஆனந்தராஜ் அளித்த பேட்டியில், “சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நான் கடந்த 1997-ல் எஸ்.எஸ்.எல்.சியும், 1999-ல் பிளஸ் 2 படித்து முடித்து புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். அதன் பிறகு, ஆசிரியர் பயிற்சி முடித்து அதையும் பதிவு செய்தேன். எந்த வேலையும் வரவில்லை.

அதன்பிறகு, இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி முடித்து அதையும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு ஓட்டுநர் பணியாவது கிடைக்கும் என்று காத்திருந்தும் வேலை கிடைக்கவில்லை. தற்போது குறைந்த கூலிக்கு தனியார் வாகனம் ஓட்டி, குடும்பத்தை நடத்தி வருகிறேன்.

இந்நிலையில், எனது கல்விச் சான்றுகளோடு பல முறை அரசிடம் மனு அளித்தும் அரசு வேலை கிடைக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டதால் இவ்வாறு செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “பொது வெளியில் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்” : ரசிகர்களுக்கு நடிகர் அஜித் குமார் அறிவுரை!