Tamilnadu

“கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடியால் 90% பயனடைந்தது அ.தி.மு.கவினர் மட்டுமே” - கே.என்.நேரு குற்றச்சாட்டு!

திருச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தி.மு.க முதன்மை செயலாளருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், ரூ. 1.50 லட்சம் மதிப்பில் 2 நபர்களுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 3 சக்கர சைக்கிள்கள், மடக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் முடநீக்கியல் சாதனங்கள் போன்றவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.என். நேரு, “கடந்த 4 ஆண்டுகளில் அ.தி.மு.கவினர் விவசாய பயிர்க்கடனுக்கு சென்றால் அவர்களுக்கு உடனடியாக கடன் வழங்கப்பட்டது, தி.மு.கவினர் யாருக்கும் விவசாயப் பயிர்க்கடன் பெரிய அளவில் வழங்கப்படவில்லை எனவே அதனை முதல்வர் தள்ளுபடி செய்துள்ளார். இதனால் 90% பயனடைவது அ.தி.மு.கவினர் மட்டுமே” எனத் தெரிவித்தார்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரின் சொத்துக்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்கள் எதையும் தமிழக அரசு பறிமுதல் செய்ய வில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த கே.என்.நேரு, ஜெயலலிதா இறந்துவிட்டார் என்பதால் அவருடைய சொத்துக்களை பொறுமையாக கைப்பற்றிக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள் போல எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம், பகுதி செயலாளர் காஜாமலை விஜி, வழக்கறிஞர்கள் ஓம்பிரகாஷ்,பாஸ்கர், கிராப்பட்டி செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Also Read: “அ.தி.மு.க அரசு உங்களுக்கு அஞ்சி நடுங்கலாம்; தமிழகத்தின் உரிமைகளை நாங்கள் ஒலிப்போம்" - ஜோதிமணி ஆவேசம்!