Tamilnadu

சென்னையில் பிரியாணி, பிஸ்கட் பாக்கெட்களில் புழு : மெத்தனத்தில் உணவு பாதுகாப்புத்துறை - பதட்டத்தில் மக்கள்

சென்னை தாம்பரம் ராஜாஜி சாலையில் பிரபல பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியில் மேற்கு தாம்பரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் ராகி பிஸ்கட் வாங்கியுள்ளார்.

இதையடுத்து பிஸ்க்கட் பாக்கிட்டை பிரித்து பார்த்தபோது பிஸ்கட் முழுவதும் புழுக்கள் இருந்துள்ளன. இதனைக் கண்டு கணேசன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனிடையே பேக்கரிக்கு வந்த மேலும் ஒருவர் ராகி பிஸ்கட்டை வாங்கி பார்த்தபோது அதிலும் புழுக்கள் இருந்துள்ளன.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தாம்பரம் நகராட்சி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அந்த பேக்கரியில் அதிரடி சோதனை மேற்கொண்டார். சோதனையில் ராகி பிஸ்கட் பாக்கெட்டில் புழு மற்றும் பூச்சி இருப்பதை உறுதி செய்தார்.

மேலும் இந்த பிஸ்கட் காலாவதியானது என்றும் தெரியவந்தது. இதனையடுத்து ராகி பிஸ்கட்களை கைப்பற்றி கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தாம்பரத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முறையாக சோதனை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தாம்பரத்தில் பிரியாணி கடையில் புழு இருப்பதை அறியாமல் சாப்பிட்ட ஒருவர் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Also Read: பேனரை ட்ரோனில் இருந்து வீசிய சசிகலா தொண்டர்கள் : உயிரிழப்புகளுக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா ?