Tamilnadu
செயின் பறிப்பு முயற்சியின்போது கூச்சலிட்ட பெண்ணை குளத்தில் தள்ளி கொலை - முன்னாள் இராணுவ வீரர் கைது!
கன்னியாகுமரி அருகே செயின் பறிப்பு முயற்சியின்போது கூச்சலிட்ட பெண்ணை குளத்தில் தள்ளிவிட்ட முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின் ராஜ் (35). இராணுவத்தில் பணிபுரிந்த இவர் நடத்தை சரியில்லாத காரணத்தால் அந்தப் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஊருக்குத் திரும்பிய மெர்லின் ராஜ், வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முளகுமூடு அருகே பூந்தோப்பு புன்னத்துவிளை பகுதியைச் சேர்ந்த மேரி ஜெயா (45) என்பவர், ரேஷன் கடைக்குச் சென்றுள்ளார். ரேஷன் கடை திறக்காததால் வீடு திரும்பிக்கொண்டிருந்த மேரி ஜெயாவின் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க மெர்லின் ராஜ் மற்றும் அவரது கூட்டாளி ஆகியோர் முயன்றுள்ளனர்.
செயினை விடாமல் மேரி ஜெயா கூச்சல் போட்டதால் அப்பகுதியினர் அங்கு ஓடிவந்துள்ளானர். இதனால் அவரை அருகிலுள்ள குளத்தில் தள்ளிவிட்டுவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார் மெர்லின் ராஜ். ஆனால், அவரைப் பிடித்த அப்பகுதி மக்கள் அவரை சரமாரியாகத் தாக்கினர். அவரது கூட்டாளி் தப்பியுள்ளார்.
பின்னர், போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் குளத்தில் மேரி ஜெயாவைத் தேடினர். மேரி ஜெயா உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பெண்ணை குளத்திற்குள் தள்ளி விட்டுக் கொன்ற முன்னாள் இராணுவ வீரரான மெர்லின் ராஜ் மீது ஏற்கனவே வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் இராணுவ வீரர், தொடர்ச்சியாக சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததும், தற்போது ஒரு உயிரிழப்புக்கு காரணமாகியிருப்பதும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?