Tamilnadu

“கிசான் திட்டத்தில் ஆளுங்கட்சியினர் பெருமளவில் மோசடி” மக்களவையில் குற்றஞ்சாட்டிய கள்ளக்குறிச்சி திமுக MP!

தமிழ்நாட்டில் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிதியில் பெரும் மோசடி நிகழ்ந்துள்ளது. மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளகுறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி நாடாளுமன்றத்தில் 377வது விதியின் கீழ் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிதி, வங்கி வழியாக செலுத்துவதில் பெரும் மோசடி கண்டறியபட்டு வெளிப்படுத்தபட்டுள்ளது. இந்த மோசடி திட்டமிடப்பட்ட முறையில் அரசு அதிகாரிகள், ஆளும் அ.தி.மு.க. கட்சி பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்ற அனைவருடைய கூட்டு சதியில் நடந்துள்ளது. இந்த மோசடி வெளியானதும் அதன் போலி பயனாளிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

உண்மையான ஏழை விவசாயிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இது போன்ற முறைகேடுகளை அரசினுடைய கூட்டு சதியிலேயே நடத்தப்படுவது கண்டனத்திற்குரியது. இந்த மோசடி வெளியானதும் இப்போது போலி பயனாளிகளுக்கு வழங்கபட்ட நிதிகள் முழுவதும் திரும்பப்பெறப்படுமென அறிவித்துள்ளது. இந்த அரசு, திரும்பப்பெறும் நடவடிக்கையின்படி சுமார் 90 சதவிகிதம் அளவிலான பணம் திரும்பப் பெறப்பட்டதாக தெரிகிறது.

அந்த தொகையே சுமார் 100 கோடிக்கும் அதிகம். இதுபோல எளிதாக இவ்வளவு பெரும் தொகை திரும்பப் பெறப்பட்டிருப்பதே இந்த கொள்ளையில் அதிகாரிகளும் அரசும் நேரடியாக பங்கேற்றுள்ளதற்கான ஆதாரமாகும். இந்த அவசரமான திரும்பப்பெறும் நடவடிக்கை. ஏற்கனவே இதுபோல நடத்தப்பட்ட மோசடிகளை மறைக்கும் நோக்கத்தைக் கொண்டவையாகவே இருக்கலாம். எனவே மத்திய அரசு, தமிழ்நாடு அரசின் கிசான் திட்ட நிதி அளிப்பை விரிவான மறு ஆய்வுக்கு உட்படுத்தபட வேண்டும்.

இந்த மோசடி வேலை ஏற்கனவே நடந்திருக்கிறதா? என்பதை அறிந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க ஒரு நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும். இது போன்ற சீராய்வு நடவடிக்கைகளே எதிர்கால மோசடிகளை தடுக்க உதவலாம். அரசின் இது போன்ற எளிய விவசாயிகளுக்கான உதவி திட்டங்களை இந்த கொள்ளையர் ஆட்சி கவர்ந்து செல்வதை தடுக்கப்பட வேண்டும். எனது நாடாளுமன்றத் தொகுதியான கள்ளக்குறிச்சியில் மட்டும் சுமார் 10 கோடிக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டதாக அறியப்பட்டுள்ளது.

இது மோசடி தொடர்பாக அரசு ஊழியர்கள் 12 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த மோசடியில் பெரும் பங்கினைப் பெற்ற ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் போன்றவர்கள் தப்பிவிட கூடாது. அவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என கௌதமசிகாமணி வலியுறுத்தினார்.

Also Read: “மத்தியில் ஒரு கோமாளி.. மாநிலத்தில் ஒரு கோமாளி..” - மோடி பழனிசாமியை சாடிய தயாநிதி மாறன் எம்.பி!