Tamilnadu

இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு : புகாரளித்தவர்கள் மீது அ.தி.மு.கவினர் கொலைவெறி தாக்குதல்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் அதிமுகவினர் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் அளித்தவர் மீது அதிமுகவினர் கொலைவெறித் தாக்குதல். தாய், மகன் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து திட்டங்களிலும் தொடர்ந்து அ.தி.மு.கவினர் முறைகேடு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஆடுகள் வழங்கும் திட்டத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடப்பதாகவும் தன்னிலப்பாடி ஊராட்சியில் ஆடுகள் வழங்காமல் ஆடுகள் வழங்கியதாக கணக்கு காட்டி பல லட்ச ரூபாய் அ.தி.மு.கவினர் முறைகேடு செய்வதாக புகார் அளித்த வார்டு உறுப்பினர் ராஜிவ் காந்தி மற்றும் அவரது தாயார் வெற்றிச்செல்வி இருவரையும் அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் செல்வேந்திரன், அவரது மனைவி ரசியா உள்ளிட்ட அ.தி.மு.கவினர் 20-க்கும் மேற்பட்டோர் வீடு புகுந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.

இதனால் கை, தலையில் படுகாயம் அடைந்த ராஜிவ் காந்தி மற்றும் அவரது தாயார் வெற்றிச்செல்வி என இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகை தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நமது கலைஞர் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சுந்தரி, முருகவேல் ஆகியோர் மீதும் அதிமுகவினர் தாக்கியுள்ளனர். அ.தி.மு.கவினரின் இத்தகைய கொடூர செயலால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் லட்சக்கணக்கில் மோசடி: நாகையில் அ.தி.மு.க ஊராட்சிமன்றத் தலைவர் வசூல் வேட்டை!