Tamilnadu

“RMMCH மாணவர்களின் கோரிக்கையை ஏற்க ’ஈகோ’ தடுக்கிறதா?” - எடப்பாடி அரசை சாடிய உதயநிதி ஸ்டாலின் !

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் தனியார் சுயநிதி கல்லூரிகளை கைவிட பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்தும் அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் 53வது நாளாக மாணவர்கள் போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் உயர்கல்வித் துறையில் கட்டுப்பாட்டிலிருந்த இந்த மருத்துவ கல்லூரி சுகாதாரத்துறைக்கு மாற்றி கடந்த வியாழக்கிழமை தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் மாணவருக்கான கல்விக் கட்டணம் குறித்த எந்தவித விளக்கமோ, ஆணையோ பிரிக்கப்படாத காரணத்தால் மாணவர்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலிருந்த இந்த மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணைக்கு தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி (RMMCH)-ஐ ஏற்ற நிலையில், அதை ‘சுகாதாரத்துறை வசம் ஒப்படைத்து கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியாக மாற்றுவோம்’ என அடிமைகள் சென்றாண்டு சட்டசபையில் அறிவித்தனர்.

இதையடுத்து பிற அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே RMMCH-லும் வசூலிக்க கோரி மாணவர்கள் 50 நாட்களுக்கும் மேல் போராடி வருகின்றனர். அதை கண்டுகொள்ளாத அடிமைகள், கடந்தாண்டு செய்த அறிவிப்புக்கு இப்போது தான் அரசாணை வெளியிட்டுள்ளனர். அதிலும், பிற அரசு கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் என்பது பற்றி எதுவும் குறிப்பிடாதது மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்றால், அவர்களின் போராட்டத்தால் தான் இது சாத்தியமானது என சொல்வார்களோ என்ற ’ஈகோ’ அடிமைகளை தடுக்கிறதா? பதவிக்காக யார் கால்களிலும் விழத் தயாராக இருக்கும் எடுபுடி கும்பல், RMMCH மாணவர் விஷயத்தில் ’ஈகோ’வை ஓரங்கட்டி குறைவான கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 43 வது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டம் : ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையற்ற மூடல்!