Tamilnadu

பட்டியலின இளைஞரை கடத்தி, துன்புறுத்தி வாயில் சிறுநீர் கழித்த கொடூரம் - சாதி வெறி கும்பல் அட்டூழியம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரைக் கடத்திச் சென்று இரவு முழுவதும் அடித்து துன்புறுத்திய நபர்கள், அவரது வாயில் சிறுநீர் கழித்து கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த குணத்திரான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மதன் (19) . பட்டியலினத்தைச் சேர்ந்த மதன், பொறியியல் டிப்ளமோ முடித்து விட்டு கோவையில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார்.

பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு வந்த மதன், கடந்த 24ம் தேதி பட்டமங்கலத்தில் இரவு 7 மணிக்கு 4 நண்பர்களுடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது தண்ணிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப், மெய்கண்டன், அமரடக்கியைச் சேர்ந்த மூர்த்தி உள்ளிட்ட 4 பேர் வந்து சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி, அவர்களைத் தாக்கியுள்ளனர்.

கடுமையாகத் தாக்கப்பட்ட மதன் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இரவு 11 மணிக்கு வீட்டிற்கு உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அமரடக்கி அருகில் அவர்களை வழிமறித்த பிரதீப் உள்ளிட்ட நால்வருரும் அருகில் உள்ள கண்மாய்க்கு காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

அங்கு மது அருந்தியபடி மதனை கடுமையாகத் தாக்கியுள்ளனர்; அவர் குடிக்க தண்ணீர் கேட்டபோது வாயில் சிறுநீர் கழித்து அவமானப்படுத்தியுள்ளனர். அதிகாலை 5 மணிக்கு நான்கு பேரும் அசந்து துாங்கிய போது, அவர்களிடம் இருந்து தப்பித்த மதன், அருகில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து, தன் மீதான தாக்குதல் குறித்தும் சாதியைக் குறித்து திட்டி கொடுமை செய்தது குறித்தும் மீமிசல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில், பிரதீப் உள்ளிட்ட 3 பேர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: “தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கும் ஆட்சியை நான் நடத்துவேன்” - வேலூரில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!